விடாது கருப்பு...ராஜ்யசபா சீட்....எடப்பாடி பழனிசாமியை சந்திக்கிறது தேமுதிக குழு : பிரேமலதா
சென்னை: அதிமுகவிடம் ஒரு ராஜ்யசபா சீட் வழங்க வலியுறுத்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தேமுதிக நிர்வாகிகள் 2 நாட்களில் சந்திப்பார்கள் என்று அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
Recommended Video
தமிழகத்தில் 6 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் மார்ச் 26-ல் நடைபெறுகிறது. ஒரு ராஜ்யசபா எம்.பி.க்கு 34 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை.
தமிழக சட்டசபையில் தற்போதைய நிலையில் திமுக, அதிமுக இரு கட்சிகளுக்கும் தலா 3 ராஜ்யசபா எம்.பி.க்கள் கிடைக்கும். திமுகவிலும் அதிமுகவிலும் யார் யாருக்கு ராஜ்யசபா சீட் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அதிமுக கூட்டணியில் தங்களுக்கு ஒரு ராஜ்யசபா சீட் கொடுக்க வேண்டும் என்று தேமுதிக வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த பிரேமலதா விஜயகாந்த், அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் போதே ஒரு ராஜ்யசபா சீட் கேட்டிருந்தோம். அதிமுக ஒரு ராஜ்யசபா சீட்டை எங்களுக்கு வழங்கும் என காத்திருக்கிறோம் என்றார்.
ஆனால் இதற்கு பதிலளித்த அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, ராஜ்யசபா சீட் கேட்க அனைவருக்கும் உரிமை உள்ளது. இது குறித்து அதிமுக தலைமைதான் இறுதி முடிவு எடுக்கும் என்றார். இந்த நிலையில் சென்னை வேப்பேரியில் நேற்று நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பிரேமலதா கூறியதாவது:
நாம் அனைவருமே இந்தியர்கள் என்பதை முதலில் உணர வேண்டும். சி.ஏ.ஏ. பற்றி இங்கே சரியான புரிதலே இல்லை. ஜாதி, மதத்தை யாரும் தூண்டிவிடக் கூடாது. நாட்டுக்கு நல்லது எனில் சி.ஏ.ஏ.வை வரவேற்போம். அது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றால் எதிர்க்கவும் செய்வோம்.
எங்களைப் பொறுத்தவரை சி.ஏ.ஏ. எந்த ஒரு மதத்துக்குமே எதிரானது அல்ல. இங்கே வாழும் மக்களுக்கும் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. இதனை வைத்து இங்கே அரசியல் செய்யவும் கூடாது. தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கொடுக்கப்படும் என அதிமுகவுடன் கூட்டணி வைத்த போதே உறுதி அளித்தனர். இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை 2 நாட்களில் தேமுதிக நிர்வாகிகள் சந்தித்து வலியுறுத்துவார்கள். இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.