துரைமுருகன் வீட்டை முற்றுகையிட்டு தேமுதிக போராட்டம்.. சாலை மறியல்.. போலீஸ் குவிப்பு.. பெரும் பதற்றம்
Recommended Video
சென்னை: திமுக பொருளாளர் துரைமுருகனின் காட்பாடி இல்லத்தை முற்றுகையிட்டு தேமுதிக கட்சியினர் போராட்டம் நடத்தியதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது.
அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் ரகசியமாக துரைமுருகன் மூலமாக திமுகவுடனும், தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த தகவலை பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் அம்பலப்படுத்தினார் துரைமுருகன்.
இதையடுத்து நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தேமுதிக துணைப் பொதுச் செயலாளர் சுதீஷ், துரைமுருகனுடன் 10 நாட்களுக்கு முன்பாக பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், தற்போது பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும் கூறினார்.
அப்பாடா.. ஒரு வழியாக தேமுதிக இழுபறிக்கு இன்று க்ளைமேக்ஸ்
சிக்கலில் தேமுதிக
இதுகுறித்து கருத்து தெரிவித்த துரைமுருகன், தேமுதிக பரிதாப நிலையில் உள்ளது. நான் மேலும், அவர்கள் மனதை புண்படுத்தும் வகையில் மீண்டும் கருத்து சொல்ல விரும்பவில்லை என்று கிண்டலாக பதில் அளித்தார். இந்த நிலையில் தேமுதிகவின் இரட்டை நிலைப்பாடு அம்பலமானதால் அவர்களை கூட்டணியில் சேர்த்துக் கொள்வதற்கு அதிமுகவும் யோசித்து வருகிறது.
காட்பாடியில் முற்றுகை
தேமுதிக கேட்ட தொகுதிகளை கொடுக்காமல், விருப்பமில்லாத தொகுதிகளை ஒதுக்க அதிமுக முயற்சி செய்து வருகிறது. இதனால் அங்கும் கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ளது. இதனால் கோபம் அடைந்த தேமுதிகவினர் இன்று காலை வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள துரைமுருகன் இல்லத்தை முற்றுகையிட முயற்சி செய்தனர்.
சாலை மறியல்
கையில் கருப்புக் கொடிகள் மற்றும் தங்கள் கட்சி கொடிகளுடன் அவர்கள் வந்திருந்தனர். ஆண்களும் பெண்களும் திரளாக இதில் பங்கேற்றனர். ஆனால், போராட்டத்தை நடத்துவதற்கு போலீசார் அனுமதி தர மறுப்பு தெரிவித்து அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் கோபமடைந்த தேமுதிக தொண்டர்கள், காட்பாடி- சித்தூர் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
திமுக கோபம்
துரைமுருகனுக்கு எதிராக தேமுதிகவினர் முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் காட்பாடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே தேமுதிகவின் இந்த செயல்பாடு, திமுக தொண்டர்களை கோபத்துக்கு உள்ளாகி உள்ளது. இதனால் இரு கட்சி தொண்டர்கள் நடுவே மோதல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் பரபரப்பான சூழ்நிலை உருவாகியுள்ளது.