அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்... ஆனால் தேஜகூ முதல்வர் வேட்பாளரை ஏற்போம்.. சொல்வது பிரேமலதா
சென்னை: அதிமுக கூட்டணியில்தான் தேமுதிக இருக்கிறது; இருப்பினும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக யார் அறிவிக்கப்பட்டாலும் ஏற்போம் என்று அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா கூறியுள்ளார்.
லோக்சபா தேர்தலில் உருவாக்கப்பட்ட அதிமுக தொடரும் என அதிமுக அறிவித்தது. ஆனால் அதிமுக கூட்டணியில் தமாகாவை தவிர பாஜக, பாமக, தேமுதிக ஆகியவை இடம்பெற்றுள்ளனவா? இல்லையா? என்பதில் இந்த கட்சித் தலைவர்களின் பேட்டி குழப்பத்தை ஏற்படுத்தியது.
அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டிருக்கிறார். ஆனால் கூட்டணி கட்சி தலைவர்கள் இதை ஏற்காமல் ஆளுக்கு ஒரு கருத்து தெரிவித்தும் வருகின்றனர். இந்த நிலையில் பாஜக கூட்டணியில் இருக்கிறோம்; 40, 60 தொகுதிகள் எல்லாம் கேட்டு அதிமுகவை நிர்பந்திக்கவில்லை என அக்கட்சித் தமிழக தலைவர் முருகன் கூறியுள்ளார்.
அதிமுக அணியில் பாமக
அதிமுகவின் வேண்டுகோளை ஏற்று பாமக, வன்னியர்களுக்கான 20% இடஒதுக்கீட்டு கோரிக்கையில் பிடிவாதத்தை தளர்த்தி எம்பிசி இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு என்ற நிலைக்கு வந்தது. இதனையடுத்து அதிமுக- பாமக தலைவர்கள் பரஸ்பரம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
பிரேமலதா, விஜயபிரபாகரன் பேச்சுகள்
இந்த நிலையில் 41 தொகுதிகள் கொடுத்தால் கூட்டணி; திமுக- அதிமுகவுடன் பேச்சுவார்த்தை; நாங்கள் கூட்டணி வைத்ததால்தான் அதிமுக ஆட்சிக்கு வந்தது; மத்தியில் பாஜக ஆட்சி தொடருகிறது; கோட்டையில் தேமுதிக கொடி பறக்கதான் போகிறது என தேமுதிகவின் பிரேமலதாவும் அவரது மகன் விஜயபிரபாகரனும் சிரிக்காமலேயே பேசி வந்தனர். இப்போது இவர்களது ஸ்ருதியும் மாற தொடங்கி உள்ளது.
அதிமுக கூட்டணியில்..ஆனால்
தற்போது, அதிமுக கூட்டணியில் தேமுதிக இருக்கிறது. தேமுதிகவின் செயற்குழு, பொதுக்குழு கூடி கூட்டணி, தொகுதிப் பங்கீடு பற்றி முடிவெடுப்போம். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி முதல்வர் வேட்பாளராக யாரை அறிவித்தாலும் ஏற்போம் என கூறியுள்ளார் பிரேமலதா.
சிராக் பாஸ்வான் மாதிரியே..
பீகார் தேர்தலில் பாஜக- ஜேடியூ கூட்டணி அமைத்தது. ஆனால் பாஜகவுடன் மட்டும் கூட்டணி என கூறிக் கொண்டே ஜேடியூவுக்கு எதிராக வேட்பாளர்களை களமிறக்கி குழிபறித்த சிராக் பாஸ்வான் போலவே தேமுதிக தலைவர்கள் தொடர்ந்து பேசுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.