இனியும் பொறுமையில்லை... எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை கூட்டணி - பிரேமலதா
கேப்டனுக்கு தமிழில் பிடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்பு, எனக்கு தமிழில் பிடிக்காத ஒரே வார்த்தை கூட்டணி என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
சென்னை: கேப்டனுக்கு தமிழில் பிடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்பு, எனக்கு தமிழில் பிடிக்காத ஒரே வார்த்தை கூட்டணி என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். எங்கள் இருவருக்கும் கூட்டணியில் உடன்பாடு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இதற்காக தமிழக அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிமுக, திமுகவில் உள்ள கூட்டணி கட்சிகளுடனான பேச்சுவார்த்தை மறைமுகமாக நடைபெற்று வருகிறது. , திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் தங்களது சொந்த சின்னத்தில் போட்டியிடுவதாக கூறி வருகின்றன. இதனால் அக்கட்சியில் சலசலப்பு நீடித்து வருகிறது. தொகுதி பங்கீடும் இன்னமும் இறுதி செய்யப்படவில்லை.
அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை
அதிமுக கூட்டணியில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் கூட்டணி குறித்து அதிமுக அமைச்சர்கள் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் நிலையில், இதே கூட்டணியில் உள்ள தே.மு.தி.கவுடன் அதிமுக இதுவரை கூட்டணி குறித்து எவ்வித பேச்சுவார்த்தையும் தொடங்கிவில்லை.
மக்கள் நலக்கூட்டணி
சட்டசபைத் தேர்தலில், தேமுதிக அதிமுக கூட்டணியில் இருந்து கழற்றிவிடப்படுமா? அல்லது தனித்து போட்டியிடுமா என்பது குறித்து பெரும் சந்தேகம் நிலவி வருகிறது. கடந்த 2016ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் விஜயகாந்த் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார். மக்கள் நலக்கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட விஜயகாந்த் உள்ளிட்ட பலரது டெபாசிட் காலியானது.
பிரேமலதா பேட்டி
கூட்டணிக்காக பேச அழைப்பு வரும் என்று எதிர்பார்த்து காத்திருந்த பிரேமலதா தற்போது விரக்தியின் எல்லைக்கே போய் விட்டார். அதன் வெளிப்பாடாகத்தான் தமிழில் எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை கூட்டணி என்று கூறியுள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்ற பூத் முகவர்கள் மற்றும் செயல் வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், இதனைத் தெரிவித்துள்ளார்.
பிரேமலதாவுக்கு பிடிக்காத வார்த்தை
தொண்டர்கள் மத்தியில் பேசிய பிரேமலதா, வரவிருக்கும் தேர்தலுக்காக தேமுதிக தீவிரமாக தயாராகி வருகிறது. முதன் முதலாக திமுக, மற்றும் அதிமுகவுக்கு மாற்றுக்கட்சியாக உருவெடுத்த தேமுதிகவை கட்சி தொண்டர்களும், நிர்வாகிகளும், கூட்டணியில் புகுத்திவிட்டனர். கேப்டனுக்கும் தமிழில் பிடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்பு, எனக்கு தமிழில் பிடிக்காத ஒரே வார்த்தை கூட்டணி என்று கூறினார் பிரேமலதா.
வெற்றி இலக்கு
எங்கள் இருவருக்கும் கூட்டணியில் உடன்பாடு இல்லை. கூட்டணியில் இருந்துகொண்டு நம்முடைய வாக்குகளை வாங்கிக்கொண்டு நம் கட்சியினரை புறக்கணிக்கின்றனர். நாம் யாருக்காகவும் காத்திருக்க வேண்டியதில்லை. தலைவர் கேப்டனை முதல்வராக்க வேண்டும். நாம் வெற்றி இலக்கை அடைய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
விஜயகாந்த் அறிவிப்பு
தேமுதிக தனித்து போட்டியிடுவது புதிதல்ல. நாம் தனித்து போட்டியிட முடியும் என்று ஏற்கனவே நிருபித்துள்ளோம். இன்னும் ஒரு வாரத்தில் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டு, கூட்டணியா அல்லது தனித்து போட்டியா? என்பது குறித்து கேப்டன் அறிவிப்பார் என்றும், இன்னும் ஒரு வாரத்தில் தமிழக அரசியலில் பெரும் மாற்றம் வரபேபோகிறது என்று தெரிவித்துள்ளார்.
என்ன முடிவு செய்வார் விஜயகாந்த்
கடந்த 2011ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் அதிமுக உடன் இணைந்து தேர்தலை சந்தித்தார் விஜயகாந்த். 2014ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜக உடன் இணைந்தது தேமுதிக. 2016ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியாக மலர்ந்தது. 2019ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜக அதிமுக இணைந்து தேர்தலை சந்தித்தன. இந்த சட்டசபைத் தேர்தலில் தேமுதிகவின் நிலை என்ன வென்று இன்னும் சில நாட்களில் தெரிந்து விடும்.