உத்தேச பட்டியல்.. தேமுதிகவுக்கு 14 சீட்.. பிரேமலதாவின் 'ஜெயங்கொண்டம்' டார்கெட்டுக்கு சிக்கல்?
சென்னை: அரசியல் வட்டாரங்களிலும் சமூக வலைதளங்களிலும் அதிகாரப்பூர்வமற்ற, உத்தேச பட்டியல் என்ற தலைப்பில் அதிமுக கூட்டணி தொகுதி பங்கீடு, அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் விவரங்கள் அடங்கிய பட்டியல் வலம் வருகிறது.
அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக, தமாகா இடம்பெறுவது உறுதியாகி உள்ளது. இந்த கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு, தொகுதி விவரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்று வெளியாகியுள்ள உத்தேச தொகுதிகள் பட்டியலில் தேமுதிகவுக்கு 14 சீட் ஒதுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. அதில், விருகம்பாக்கம், எழும்பூர் (தனி), கொளத்தூர், ராணிப்பேட்டை, விருத்தாசலம், ரிஷிவந்தியம், திருவெறும்பூர், கடையநல்லூர், கள்ளக்குறிச்சி (தனி), திருப்பரங்குன்றம், லால்குடி, ஆத்தூர் (திண்டுக்கல்), தாராபுரம் (தனி), திருச்சுழி ஆகிய தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.
குறிப்பாக, சமீபத்தில் ஜெயங்கொண்டத்தில் நடைபெற்ற தேமுதிக ஆலோசனைக் கூட்டத்தில், "ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியை பொறுத்த அளவில் தற்போது நமது கட்சியை வழி நடத்திக்கொண்டிருக்கும் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. எனவே அவரை வெற்றிபெறச் செய்வதற்கு நாம் கடுமையாக உழைக்க வேண்டும்" என மாநில கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் விஜயகண்ணன் பேசியிருந்தார்.
இதனால், பிரேமலதா ஜெயங்கொண்டம் தொகுதியில் போட்டியிடவே அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகின. வன்னியர்கள் அதிகம் கொண்ட இத்தொகுதியில் போட்டியிட பிரேமலதா முடிவு செய்திருப்பதாகவும் கூறப்பட்டது.
ஆனால், இன்று வெளியாகியுள்ள உத்தேச பட்டியலில், தேமுதிக லிஸ்டிலேயே ஜெயங்கொண்டம் இடம்பெறவில்லை. மாறாக, பாமகவுக்கு அத்தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2011ல் இத்தொகுதியை கைப்பற்றிய பாமக, 2016ல் அதிமுகவிடம் இழந்தது குறிப்பிடத்தக்கது.
எனினும், இது உத்தேச பட்டியல் தான். அதிகாரப்பூர்வ பட்டியல் முறையாக அதிமுக சார்பில் வெளியிடப்படும்.