அமைச்சரவையில் இடம்.. ஜெயிச்சுட்டு வாங்கன்னு பாஜக விரட்டி அடிச்சதை 'நாகரிகமாக' சொல்கிறாரோ சுதீஷ்?
சென்னை: தேமுதிக என்கிற கட்சியின் எதிர்காலமே லோக்சபா தேர்தலில் ஒரு தொகுதியிலாவது வெல்வதில்தான் இருக்கிறது.
தேமுதிகவை விஜயகாந்த் தொடங்கி விஸ்வரூப பாய்ச்சலைக் காட்டினார். இதனால் திமுக பெரும் பின்னடைவை சந்திக்க நேர்ந்தது.
ஆனால் தேர்தல்களில் தேமுதிக எடுத்த நிலைப்பாடுகள் அக்கட்சியை அதளபாதாளத்துக்கு தள்ளியது. தேமுதிகவின் 2-ம் கட்ட தலைவர்களாக இருந்ததவர்கள் திமுக, அதிமுகவுக்கு தாவிவிட்டனர். இப்போது விஜயகாந்த் மனைவி பிரேமலதாதான் அக்கட்சிக்கு எல்லாமுமாக இருக்கிறார்.
அதுவும் தற்போதைய லோக்சபா தேர்தலில் அதிமுக, திமுக, பாஜக என அனைத்து தரப்புடனும் பேச்சுவார்த்தை நடத்தி மிகவும் அவமானப்பட்டுப் போனது தேமுதிக. கடைசியில் வேறுவழியே இல்லாமல் அதிமுக அணியில் 4 தொகுதிகளை மட்டும் பெற்றுக் கொண்டது தேமுதிக.
இதில் எந்த ஒரு தொகுதியிலும் அக்கட்சி வெல்லும் நிலையில் இல்லை. இந்த நிலையில்தான், மத்திய அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து தேர்தல் முடிவுகளுக்குப் பின் முடிவெடுப்போம் என சுதீஷ் கூறியிருக்கிறார்.
பாஜகவைப் பொறுத்தவரை தேமுதிகவும் இருந்தால் இருந்துவிட்டுப் போகும் என்கிற கட்சிதான். அப்படியே தேமுதிக 1 தொகுதியில் வென்றாலும் கூட மத்திய அமைச்சர் பதவியெல்லாம் தந்துவிடப் போவதும் இல்லை என்பதுதான் யதார்த்தம்.
வேண்டுமானால், நீங்க முதலில் ஜெயிச்சு காண்பிங்க.. அமைச்சரவை பற்றி அப்புறம் பேசலாம் என்று பாஜக விரட்டி அடித்திருக்கவே வாய்ப்பு என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.