வேட்பாளர் தேர்வு... விசுவாசம் தான் தகுதி... நிர்வாகிகளுக்கு பிரேமலதா அட்வைஸ்
சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வது பற்றி மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவுரை வழங்கிய பிரேமலதா, விசுவாசத்தை தான் முதல் தகுதியாக பார்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது.
அதில் பேசிய பிரேமலதா விஜயகாந்த் மற்றும் சுதீஷ் ஆகியோர், விலைபோகாத நாணயம் மிக்க நபர்களை வேட்பாளராக தேர்வு செய்யுங்கள் என மாவட்ட நிர்வாகிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஈழத் தமிழ் அகதிகளுக்கும் இந்திய குடியுரிமை வழங்க வேண்டும்: ஸ்ரீஸ்ரீரவி சங்கர்
நிர்வாகிகள் கூட்டம்
ஊரக உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. அதில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஒன்றிய கவுன்சிலர் உள்ளிட்ட பதவியிடங்களுக்கு போட்டியிட விரும்புவர்களை விசுவாசத்தின் அடிப்படையில் தேர்வு செய்ய வேண்டும் என மாவட்டச் செயலாளர்களிடம் கேட்டுக்கொண்டாராம் பிரேமலதா விஜயகாந்த்.
நாணயம்
மேலும், தேர்தலுக்கு பின்னர் வெற்றிபெற்று விலைபோகாத வகையில் நாணயமான நபர்களை தேர்தலில் போட்டியிட வைக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். பணத்தை முதல் தகுதியாக வைத்து இந்த முறை வேட்பாளர்களை தேர்வு செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறாராம் பிரேமலதா.
கசப்பான அனுபவம்
கடந்த 2011-ம் ஆண்டு தேமுதிக சார்பில் எம்.எல்.ஏ.க்களான மதுரை சுந்தர்ராஜன், பேராவூரணி அருண்பாண்டியன், ராதாபுரம் மைக்கேல் ராயப்பன் போன்றோர் அதிமுகவுக்கு தாவியது தேமுதிகவை நிலைகுலையச் செய்தது. பின்னர் ஒரு வழியாக இக்கட்டான நிலைகளை கடந்து பழைய செல்வாக்கை மீட்டெடுக்கும் பணியில் தேமுதிக தலைமை இப்போது இறங்கியுள்ளது.
எச்சரிக்கை
இந்நிலையில் மீண்டும் நம்பிக்கை மோசடி செய்பவர்களுக்கு வாய்ப்பு தந்து அது கட்சியின் வளர்ச்சிக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்திவிடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக உள்ளார் பிரேமலதா விஜயகாந்த். ஆகையால், உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர் தேர்வில் அதிக முக்கியத்துவம் அளிக்கிறார்.