தேர்தல் கூட்டணிகளால் தேமுதிகவுக்கு ஒரு பிரயோஜனமும் இல்லையே.. சொல்வது பிரேமலதா விஜயகாந்த்
சென்னை: தேர்தல் கூட்டணிகளால் தேமுதிகவுக்கு எந்த ஒரு பயனுமே இல்லை என அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியல் களத்தில் கூட்டணி மாறி கட்சியாக அடையாளப்படுத்தப்பட்டிருப்பது தேமுதிகதான். ஒவ்வொரு தேர்தலின் போதும் இருக்கிற அத்தனை கட்சிகளுடனும் கூட்டணி பேசுகிற ஒரே கட்சி தேமுதிக.
நம்பி வாங்க தம்பி... அதிமுக இளைஞர், இளம்பெண்கள் பாசறைக்கு ஆள் பிடிப்பு தீவிரம்
ராஜ்யசபா சீட் பேரம்
தேமுதிகவைப் பொறுத்தவரை எத்தனை இடங்கள் என்பதைத்தாண்டி ஒரே ஒரு ராஜ்யசபா சீட்டை பெற்று டெல்லியில் கால் பதிக்க வேண்டும் என்பதுதான் கனவு. இந்த கனவுக்காக அத்தனை கூட்டணி கட்சிகளுக்கும் காவடி தூக்குவதில் ரெடியாகவே இருக்கிறது அந்த கட்சி.
திமுக பேச்சுவார்த்தை?
இதனால் தேமுதிகவை ஒருநம்பகமான கூட்டணி கட்சியாக பெரிய கட்சிகள் பார்ப்பது இல்லை. இந்த நிலையில் அண்மையில் திமுக தரப்பில் தேமுதிகவுடன் சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகின. அப்போதும் தேமுதிக தரப்பில் அந்த ஒரு ராஜ்ய்சபா சீட்டுக்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்கிறது.
விழுப்புரம் நிர்வாகிகளுடன் ஆலோசனை
இதனிடையே விழுப்புரம் மாவட்ட தேமுதிகவினருடன் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் பிரேமலதா விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார். இதில் மாவட்ட செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது கொரோனா லாக்டவுன் காலத்தில் பொதுமக்களுக்கு என்ன மாதிரியான உதவிகள் வழங்கப்பட்டன என்பதை பிரேமலதாவிடம் கட்சி நிர்வாகிகள் விவரித்தனர்.
பிரேமலதா விரக்தி
அப்போது, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட சட்டசபை தொகுதிகள்தான் நமக்கு முக்கியம். அதனால் இந்த தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இதற்காக தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என பிரேமலதா ஆலோசனை கூறினார். அப்போது கூட்டணி நிலவரம் குறித்து கட்சி நிர்வாகிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பிரேமலதா விஜயகாந்த் விரக்தியாகவே நிர்வாகிகளிடம் பதில் கூறியிருக்கிறார்.
கூட்டணியால் பலன் இல்லை
மேலும், ஒவ்வொரு தேர்தலிலும் நாமும் கூட்டணி வைக்கிறோம். கூட்டணி வைப்பதால் நமக்கு எந்த பயனும் கிடைக்கவில்லை. வரும் தேர்தலில் கூட்டணி இருக்கிறதா? இல்லையா எனவும் இப்போது சொல்ல முடியாது. இருந்தாலும் கட்சி நிர்வாகிகள் எதற்கும் தயாராக இருக்க வேண்டும். நமது வெற்றியில்தான் கட்சியின் எதிர்காலமே இருக்கிறது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் எனவும் அட்வைஸ் செய்திருக்கிறார் பிரேமலதா.