நீ.. வா.. போ.. நிருபர்களை ஒருமையில் பேசிய பிரேமலதா.. கொந்தளித்த பத்திரிக்கையாளர்கள்
Recommended Video
சென்னை: செய்தியாளர்களை தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், ஒருமையில் பேசியதால் செய்தியாளர் சந்திப்பில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது.
திமுக பொருளாளர் துரைமுருகனை தேமுதிக நிர்வாகிகள் சந்தித்து கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியதாக செய்திகள் வெளியான நிலையில், அதை மறுத்து இன்று தேமுதிக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் பிரேமலதா.
ஆரம்பம் முதலே மிகவும் எடுத்தெறிந்து பேசி வந்தார் பிரேமலதா. கேள்வி எழுப்பும் நிருபர்களை அவர்கள் எந்த ஊடகத்தை சேர்ந்தவர்கள் என்று கேட்டுக் கொண்டு அந்த கேள்விகளுக்கு உள்நோக்கம் கற்பித்தார்.
"தூக்கி அடிச்சிருவேன் பார்த்துக்க".. பிரேமலதா வந்த பாரம்பரியம் இது!
தடித்த குரல்
தடித்த குரலில் மிகவும் ஆவேசமாக அவர் பேசிக்கொண்டே இருந்தார். அது மட்டுமின்றி நிருபர்கள் ஒவ்வொருவரையும் நீ.. வா.. போ.. என்று பேசினார். நிருபர்களின், பெயர்களை குறிப்பிட்டு அவன், இவன் என்று பேசிய போது முதலில் யாரும் பெரிதாக நினைத்துக் கொள்ளவில்லை.
ஒருமை
ஆனால் தொடர்ந்து இப்படியே பேசியதால், மொத்தமாக எழுந்து நின்று, "முதலில் ஒருமையில் பேசுவதை நிறுத்திவிட்டு செய்தியாளர் சந்திப்பை தொடருங்கள், அல்லது முடித்துக் கொள்ளுங்கள்" என்று நிருபர்கள் ஒட்டுமொத்தமாக கோஷமிட்டனர்.
நிருபர்கள் வாக்குவாதம்
இதற்கு பதிலளித்த பிரேமலதா, நீங்கள் எதைவேண்டுமானாலும் கேட்பீர்கள்.. நான் பொறுமையாக பதில் சொல்ல வேண்டுமா என்றார். அதற்கு நிருபர்கள், "நாங்கள் உங்கள் கட்சியின் கொள்கை குறித்தும், செயல்பாடு குறித்துதான் கேள்வி எழுப்புகிறோம். உங்கள் தனிப்பட்ட விஷயங்களை நாங்கள் பேச வரவில்லை. அதற்கேற்பதான் நீங்களும் பதில் பேச வேண்டுமே தவிர, ஒருமையில் பேசுவது சரியில்லை" என்று கடும் கண்டனத்தை பதிவு செய்தனர்.
விஜயகாந்த் பாணி
இதன்பிறகு பிரேமலதா தொடர்ந்து ஆவேசமாக பேசினாலும், ஒருமையில் பேசியதை நிறுத்திக்கொண்டார். முன்னதாக விஜயகாந்த்தும் நிருபர்களை சந்தித்தபோதெல்லாம், மோதல் போக்கில் ஈடுபட்டதுதான் வரலாறு என்பது குறிப்பிடத்தக்கது.