கூட்டணி பேச்சுவார்த்தையை தயவு செய்து தொடங்குங்க.. தேமுதிகவை பரிதாபமாக கெஞ்சவிட்ட அதிமுக
சென்னை: சட்டசபை தேர்தலில் தங்களை அதிமுக ஒரு பொருட்டாகவே மதிக்காத நிலையில் தயவு செய்து கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா கெஞ்சும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
தமிழக அரசியல் களத்தில் அதிமுக, திமுகவுக்கு மாற்று என்ற முழக்கத்துடன் பிறந்தது தேமுதிக. தொடக்கத்தில் தனித்து போட்டி என கெத்து காட்டிய தேமுதிக கூட்டணி வலைக்குள் சிக்கியதால் சின்னாபின்னமாகிப் போனது.
2019 லோக்சபா தேர்தலில் திமுக, அதிமுக என இரு கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி கடைசியில் இரு கட்சிகளும் கைவிடும் நிலை உருவானது. பின்னர் அதிமுக பரிதாபப்பட்டு 4 தொகுதிகளை தேமுதிகவுக்கு ஒதுக்கியது. இந்த 4 தொகுதிகளிலும் படுதோல்வியை சந்தித்தது தேமுதிக.
சசிகலாவுக்கு ஆதரவு
தற்போதைய சட்டசபை தேர்தலில் அதிமுக அணியில் பாஜக, பாமக இடம்பெற்றிருப்பது உறுதியாகி உள்ளது. ஆனால் தேமுதிகவோ அதிமுக கூட்டணியில் இருக்கிறோம் என கூறிக் கொண்டே சசிகலாவை ஆதரிக்கிறது. பாஜக, பாமகவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் அதிமுக, தேமுதிகவை கண்டுகொள்ளவே இல்லை.
புறக்கணிக்கும் அதிமுக
கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என பிரேமலதா விடுத்த வேண்டுகோளை கூட கண்டுகொள்ளவில்லை அதிமுக. இதனால் தேமுதிக ஒருவித விரக்தி நிலைக்குப் போய் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தயாராவோம் என பேசும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது தேமுதிக.
பரிதாப தேமுதிக
2016 சட்டசபை தேர்தலின் போது மக்கள் நலக் கூட்டணி உருவாக்கப்பட்டு விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி பெரும் பரபரப்பு காட்டப்பட்டது. ஆனால் இந்த தேர்தலிலோ தேமுதிகவை எந்த கூட்டணியும் சீண்டுவதாகவும் இல்லை என்கிற பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதற்கு காரணமே கள நிலவரம் எது என்பது தெரியாமல் பிரேமலதா, அவரது மகன் விஜய பிரபாகரன் ஆகியோர் பேசிவருவதுதான் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
அதிமுகவிடம் கெஞ்சும் தேமுதிக
சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, எந்த அணியிலும் கூட்டணி பேச்சுவர்த்தை தொடங்கப்படவில்லை. எங்களைப் பொறுத்தவரை இன்னும் 2 மாதங்கள்தான் தேர்தலுக்கு இருக்கிறது. ஆகையால் திமுகவோ அதிமுகவோ கூட்டணி பேச்சுவார்த்தைகளை தொடங்க வேண்டும் என கெஞ்சும் குரலில் கோரிக்கை விடுத்திருந்தார். தமிழக அரசியல் களத்தில் சிம்ம சொப்பனமாக திகழ்ந்த தேமுதிக இப்போது திசைவழி தெரியாமல் தத்தளிப்பது பரிதாபத்துக்குரியதுதான்!