"முடிவு எடுத்தால் உறுதியாக இருக்க வேண்டும்.." 10ம் வகுப்பு தேர்வு ரத்து.. விஜயகாந்த் கடும் கண்டனம்
சென்னை: 10ம் வகுப்பு பொதுத் தேர்வை தமிழக அரசு காலங்கடந்து ரத்து செய்திருப்பதை, தேமுதிக வன்மையாக கண்டிக்கிறது என்று அக்கட்சியின் நிறுவனரும், பொதுச்செயலாளருமான விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் கூட்டணியில் உள்ள தேமுதிக, முதல்வர் வெளியிட்ட ஒரு அறிவிப்புக்கு எதிராக, இவ்வாறு ஒரு கருத்தை முன்வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஜூன் 15ஆம் தேதி தொடங்கி நடைபெறவிருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.
10-ம் வகுப்பு தேர்வு ரத்து- எடப்பாடியார் அறிவிப்புக்கு செம வரவேற்பு- ஆன்லைன் வகுப்புக்கு தடை வரும்?
எடப்பாடி பழனிச்சாமி
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பெற்றோர்கள் ஒரு பக்கம் கேட்டுக் கொண்டிருக்க, மற்றொரு பக்கம் எதிர்க் கட்சிகள் ஆர்ப்பாட்டம் அறிவிக்க.., இதற்கிடையே, தேர்வை நடத்துவதற்கு எதிராக, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்ததை கருத்தில் கொண்டும் அரசு இந்த முடிவுக்கு வந்ததாக தெரிகிறது.
விஜயகாந்த் அதிருப்தி
அரசின் இந்த முடிவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். இருப்பினும் இது, முன்கூட்டியே எடுத்து இருக்க வேண்டிய முடிவு என்று அவர் சுட்டிக்காட்டினார். இந்த நிலையில்தான் தேமுதிக விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், அரசு ஒரு கொள்கை முடிவு எடுத்தால், அதில் உறுதியாக இருக்கவேண்டும். நாளும் ஒரு நிலைப்பாடு எடுப்பதை தவிர்க்க வேண்டும். அண்டை மாநிலமான தெலுங்கானா, ஐகோர்ட் கண்டனம், எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு, ஆசிரியர்கள் எதிர்ப்புக்கு பிறகு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழக அரசு ரத்துசெய்திருப்பதை தேமுதிக வன்மையாகக் கண்டிக்கிறது.
வன்மையான கண்டனம்
இதனால் மாணவர்கள்,பெற்றோர்கள், ஆசிரியர்கள் குழப்பமடைந்துள்ளனர். 'கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம்' என்பது போல் ஹால்டிக்கெட், தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்தபிறகு,காலங்கடந்த முடிவை முதலிலேயே எடுத்திருந்தால், தேமுதிக வரவேற்றிருக்கும். இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.
மேலும், பத்தாம் வகுப்பு பொது தேர்வை தமிழக அரசு காலங்கடந்து ரத்து செய்திருப்பதை தேமுதிக வன்மையாக கண்டிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
கூட்டணிக்குள் அதிர்ச்சி
கடந்த லோக்சபா தேர்தல் முதலே, அதிமுக கூட்டணியில் தேமுதிக அங்கம் வகித்து வருகிறது. அப்படி இருக்கும்போது முதல்வர் வெளியிட்ட ஒரு அறிவிப்பை, தேமுதிக கண்டிப்பதாக கூறியுள்ளது கூட்டணி அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. விஜயகாந்த் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு என்பது அதிமுக தலைவர்கள் சிலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.