திடீரென வந்த "அந்த" அறிவிப்பு... தேமுதிகவினருக்கு ஹேப்பி நியூஸ்.. 13ம் தேதி முக்கிய ஆலோசனை !
சென்னையில் தேமுதிக ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது
சென்னை: தேமுதிகவினருக்கு ஒரு மகிழ்ச்சிகரமான செய்தி வெளியாகி உள்ளது.. தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.. இந்த கூட்டம் கட்சி தலைவர் விஜயகாந்த் தலைமையில் நடக்க உள்ளது!
தேமுதிக தவிர மற்ற கட்சிகள் எல்லாம் ஜரூராக தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில், அக்கட்சியின் நிலைப்பாடு குறித்து எதுவுமே தகவல் வெளியாகவில்லை..
அதிமுக கூட்டணியில் தேமுதிகவும் இருக்கிறதா, இல்லையா என்ற சந்தேகம் எழுந்து வந்த நிலையில், தற்போதுதான், அதே கூட்டணியில் நீடிக்க போவது குறித்த செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
ஆண்டிப்பட்டி
இந்நிலையில், மதுரை ஆண்டிப்பட்டிக்கு வந்த பிரேமலதாவிடம் தேர்தல் குறித்து செய்தியாளர்கள் கேள்வியை எழுப்பி இருந்தனர்.. அதற்கு அவர், 2021-ஜனவரியில் விஜயகாந்த் தலைமையில் தேமுதிக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்றும் அந்தக் கூட்டத்திற்குப் பின்பு, கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும், அதுவரை அதிமுக கூட்டணி தொடர்கிறது என்றும் தெரிவித்திருந்தார்.
பிரேமலதா
மேலும் தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக தேமுதிக ஆயத்தமாகி வருவதாகவும், விஜயகாந்த் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்றும் அப்போது பிரேமலதா தெரிவித்திருந்தார்... பிரேமலதா சொன்னபடியே, தேமுதிக கூட்டம் நாளை மறுநாள் நடக்க உள்ளது. இது சம்பந்தமாக அக்கட்சியின் தலைமை கழகம் அதிகாரப்பூர்வமாக ஒரு அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.
ஆலோசனை கூட்டம்
அதில், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் தேமுதிகவின் நிறுவனதலைவரும், பொதுச்செயலாளருமான விஜயகாந்த் தலைமையில் வரும் ஞாயிற்றுக்கிழமை (13.12.2020), காலை 10.30 மணியளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. மாவட்ட கழக செயலாளர் அனைவரும் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்பார்ப்பு
இந்த கூட்டத்தில் சட்டமன்ற தேர்தல் குறித்தும், கூட்டணி குறித்து தேமுதிக கட்சியின் நிர்வாகிகளுடன் விஜயகாந்த் ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது, உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பற்றியும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது. அதேசமயம், பிரேமலதா குறிப்பிட்டது போலவே, கூட்டணியில் தேமுதிக நீடிக்குமா? இல்லையா? என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
விஜயகாந்த்
இறுதிக்கட்ட பிரச்சாரத்துக்குதான் விஜயகாந்த் வருவார் என்று பிரேமலதா சொல்லி இருந்தார்.. கடந்த முறை சென்னையில் பிரச்சாரம் செய்தபோது, அவரால் சரியாக பேச முடியவில்லை.. ஆனால், சில தினங்களுக்கு முன்பு ஸ்பீச் தெரபி தரப்பட்டு குணமாகி வருவதாக செய்திகள் வெளியானதால், விஜயகாந்த்தின் வருகை ஏகப்பட்ட ஆவலை பொதுமக்களிடம் அரசியலுக்கும் அப்பாற்பட்டு ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், நாளை மறுநாள் விஜயகாந்த், கட்சி அலுவலகத்துக்கு வருகை தர இருப்பதும், தேர்தல் குறித்து பேச போவதும், தேமுதிகவினரை உற்சாகத்தில் ஆழ்த்தி வருகிறது.