ஆஹா இது சூப்பர்ல.. ஒரிஜினல் "கஜா"வே பாராட்டி விட்டார் தமிழக அரசை!
தமிழக அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னை: ஒருநாளும் இல்லாத திருநாளாம்.. ஆளும் அதிமுக அரசை விஜயகாந்த் மனசார பாராட்டி இருக்கிறார்!
கஜா வந்து போனாலும் போனது, தமிழக அரசுக்கு நாலாபுறமும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. அதுவும் இதுவரை எதிரும் புதிருமாக இருந்தவர்கள், ஆகாதவர்கள், வேண்டாதவர்கள் எல்லாம் வரிந்து கட்டி கொண்டு மாநில அரசை புகழ்ந்து வருகிறார்கள்.
இதில் முக்கியமானவர்கள் ஸ்டாலின், ராமதாஸ், தமிழிசை போன்றவர்கள்தான். கஜா தாக்கத்திற்கு நடுவிலும் இந்த பாராட்டுக்களை தமிழக மக்கள் கவனிக்கவே செய்தார்கள். இப்போது அடுத்த முக்கியமான நபர் விஜயகாந்த் தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
வேதாரண்யத்தில் மு.க.ஸ்டாலின்.. புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்
வாய்நிறைய திட்டியவர்
ஜெயலலிதா இருந்த போதிலிருந்தே கடுமையாகவும், மோசமாகவும், விமர்சித்து வந்தவர் விஜயகாந்த். எங்கெல்லாம் தேமுதிக
கூட்டங்கள், பிரச்சார கூட்டங்கள் நடக்கிறதோ அங்கெல்லாம் மறக்காமல் திமுக, அதிமுகவை வாய் நிறைய திட்டிவிட்டு வந்தவர்கள்தான் விஜயகாந்த் மற்றும் பிரேமலதாவும்.
விஜயகாந்த் அறிக்கை
தற்போது, தமிழக அரசும், அமைச்சர்களும் கஜா புயல் பாதிப்பிலிருந்து மக்களை காப்பாற்ற விழிப்புடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தது பாராட்டுக்குரியது என்று மனப்பூர்வமாக கருத்து சொல்லி உள்ளார். இதற்கென தனியாக ஒரு அறிக்கையே வெளியிட்டுள்ளார் விஜயகாந்த். அந்த அறிக்கையில், அவர் கூறி இருப்பதாவது:
சிறப்பான பணிகள்
"தமிழக அரசும், அமைச்சர்களும் கஜா புயல் பாதிப்பிலிருந்து மக்களை காப்பாற்ற விழிப்புடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தது பாராட்டுக்குரியது. இரவும், பகலும் பாராமல் கண் விழித்து விரைவாக செயல்பட்ட அனைத்துதுறை அமைச்சர்களும், அதிகாரிகளும் உடனுக்குடன் ஆணை பிறப்பித்து சிறப்பாக பணிகளை ஆற்றியதற்கு தே.மு.தி.க. சார்பில் வரவேற்கிறோம்.
வேதனைக்குரியது
மிக முக்கிய புயல் பாதிப்புக்கான இடமாக வேதாரண்யம் மற்றும் நாகை உள்ளது. அங்கு அதிக வீடுகள் இழப்பு, மீனவர்கள் படகுகள் சேதம், 36-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளார்கள் என்ற செய்தி வேதனைக்குரியது. உடனடியாக மத்திய அரசு புயல் நிவாரண நிதியை தமிழக அரசுக்கு தந்து பாதிக்கப்பட்ட மீனவ மக்களுக்கு படகுகள் சரிசெய்வதற்கும், வீடுகள் சேதம் அடைந்ததை சரிசெய்வதற்கும், சாலைகள் மற்றும் போக்குவரத்து சீரமைப்பதற்கும், மின் கம்பங்களை உடனடியாக சரிசெய்வதற்கும் உதவிட வேண்டும்.
நிவாரண உதவிகள்
தமிழக அரசு கஜா புயல் நிவாரணத் தொகையை பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் கஜா புயல் பாதிப்பை உடனடி கவனத்தில் கொண்டு பாதிக்கப்பட்ட இடங்களுக்கும், அந்த பகுதி மக்களுக்கும் வேண்டிய அனைத்து உதவிகளையும் உடனடியாக செய்ய வேண்டுமென தே.மு.தி.க. சார்பில் கேட்டுக்கொள்கிறேன்".
நல்லாதான் இருக்கு
இவ்வாறு விஜயகாந்த் விரிவாகவே தனது பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துள்ளார். "கஜா"விலிருந்து பெரும்பாலான உயிர்களை காப்பாற்ற தமிழக அரசு மெச்சத் தகுந்ததுபோல் நடவடிக்கை எடுத்து எல்லோரையும் பிரம்மிக்க செய்து விட்டது என்றால், அந்த செயல்களை எதிர்க்கட்சிகள் எல்லாம் மனசார வாழ்த்தி பாராட்டி கொண்டிருப்பது புல்லரிக்கிறது!! இப்படியே எல்லா கட்சிகளும் ஒத்துமையாக இருந்தால் நல்லாதான் இருக்கும்!!