தேமுதிக தலைமையில் 3வது அணி அமைய வாய்ப்பு - கொளுத்தி போட்ட விஜயபிரபாகரன்
தமிழகத்தில் அரசியல் களம் மாறும் தேமுதிக தலைமையில் என விஜயகாந்த்தின் மகன் விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார்
சென்னை: தேமுதிக நினைத்தால் மூன்றாவது அணியை அமைக்க முடியும் என்றும் தேமுதிக தலைவர் மகன் விஜய பிரபாகரன் கூறியுள்ளார். சட்டசபைத் தேர்தலில் மூன்றாவது அணி அமைக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தேமுதிக தனித்து நிற்க எந்த அச்சமும் இல்லை. தனித்து நின்று தேர்தலை சந்தித்து உள்ளோம். வியூகங்கள் மாறும். கட்சிக்கு எது பலமோ அதன்படி செயல்படுவோம் என்றும் விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக, திமுக தலைமையில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் நடைபெற்று வருகின்றன. எந்த அணியில் எந்தக் கட்சி இருக்கும் என்பது யாராலும் உறுதியாக கூற முடியாத நிலையில் ஏற்பட்டுள்ளது.
தேமுதிக கிங் மேக்கராக இருக்க வேண்டும் என்று தொண்டர்கள் விரும்புவதாக பிரேமலதாக கூறியிருந்த நிலையில் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரனின் மூன்றாவது அணி பற்றிய பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜயகாந்த் உடல்நிலை
மதுரை காளவாசல் தனியார் திருமண மண்டபத்தில் தேமுதிக கட்சி நிர்வாகி இல்லத்திருமண விழாவில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் பங்கேற்றார். அவருக்கு கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கேப்டன் உடல்நிலை சீராக உள்ளது. கொரானா பாதிப்பு தற்போது இல்லை. ஆரோக்கியமாக இருக்கிறார் என்று கூறினார்.
தேர்தலில் விஜயகாந்த் பிரச்சாரம்
கேப்டன் தற்போது எந்தப் பிரச்சனையும் இல்லாமல் நன்றாக உள்ளார். அவரை குணப்படுத்திய மருத்துவர் செவிலியர்களுக்கு நன்றி. தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டோம். செயற்குழு பொதுக்குழு கூட்டி பணிகளை தீவிரப்படுத்துவோம். எல்லா தொகுதிகளிலும் கேப்டன் பிரச்சாரம் செய்வார். மக்களை பார்க்க வேண்டும் என்பதே அவரின் விருப்பம்.
அரசியல் களம் மாறும்
தேமுதிக ஆரம்ப காலத்தில் தனித்தே களம் இறங்கியுள்ளது. கேப்டனும், பிரேமலாதவும் கட்சித்தொண்டர்களின் எண்ணங்களை நிறைவேற்றுவார்கள். தேமுதிக தனித்து நிற்க எந்த அச்சமும் இல்லை. தனித்து நின்று தேர்தலை சந்தித்து உள்ளோம். வியூகங்கள் மாறும். கட்சிக்கு எது பலமோ அதன்படி செயல்படுவோம். அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை எதிரியும் இல்லை. கண்டிப்பாக அரசியல் களம் மாறும் என்று கூறினார்.
தவிர்க்க முடியாத கட்சி தேமுதிக
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விஜய பிரபாகரன், திமுக அதிமுகவுக்கு மாற்று தேமுதிக மட்டுமே அதை நிருபித்து காட்டியுள்ளோம். தேமுதிக தவிர்த்து மூன்றாவது அணி என எந்தக்கட்சியும் சொல்ல முடியாது. தேமுதிக நினைத்தால் மூன்றாவது அணி அமைக்க முடியும். அந்த நம்பிக்கை உள்ளது.
விஜயகாந்த் தனித்துவமான தலைவர்
வரும் தேர்தலில் பெரியவர் சிறியவர் என்ற பேச்சுக்கே இடமில்லை. கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத இச்சமயத்தில் தனித்த தனித்துவமான தலைவர் இல்லை. விஜயகாந்த் மகனாக நான் கருத்து சொன்னால் கட்சிக்குள் குழப்பமாகி விடும். நடிகர்கள் கட்சி ஆரம்பித்தால் வாழ்த்து மட்டுமே சொல்ல முடியும். களத்தில் சந்திப்போம் என்று கூறினார் விஜய பிரபாகரன்.