அதிமுக + பாஜக கூட்டணியில் தேமுதிக இடம் பெறும்... தமிழிசை சௌந்தரராஜன் நம்பிக்கை
Recommended Video
சென்னை: திருநாவுக்கரசர் சந்தித்திருந்தாலும் தேமுதிக எங்களோடு தான் இணையும் என்ற நம்பிக்கை உள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் பாமக இடம்பெற்றுள்ள நிலையில், தேமுதிகவை கூட்டணிக்கு இழுப்பதில் திமுகவும், அதிமுகவும் ஆர்வம் காட்டி வருகிறது.
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் விஜயகாந்தை சந்தித்து பேசினார். அப்போது, உடல்நலம் குறித்து கேட்டறிந்ததாகவும், அரசியல் குறித்து பேசியதாகவும் தெரிவித்தார்.
தேமுதிக வரும்
இந்தநிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், விரைவில் தேமுதிக கூட்டணிக்கு வரும் என்று நம்புவதாக கூறினார். மேலும், தேமுதிகவிற்கு தேர்தலின் போது வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் பெறும் திறமை உள்ளதாக தெரிவித்தார்.
பதற்றத்தில் திமுக
தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் கூட்டணியை பாஜக ஏற்படுத்தியுள்ளது என்றும் கூறினார். எங்கள் கூட்டணி தான் வெற்றி கூட்டணி, இந்த கூட்டணியை கண்டு பதற்றத்தில் திமுக இருக்கிறது என்றும் கூறினார்.
பலமான கூட்டணி
முன்னதாக, ஒரு நல்ல பலமான கூட்டணி அமைந்திருக்கிறது. நாளையும் நமதே நாற்பதும் நமதே என்று சொல்லும் அளவிற்கு மிக பிரம்மாண்டமான வெற்றியை பெறும் என்றார்.
மெகா கூட்டணி
திமுக காங்கிரஸ் கூட்டணி பெரிய கூட்டணி போல் காட்சியளித்தாலும், மெகா கூட்டணி என்பது அதிமுக, பாஜக, பாமக தான், என்றும், மத்தியிலும் மோடி தலைமையில் ஆட்சி தொடர இந்த கூட்டணி வழி வகை செய்யும் என்றும் தமிழகத்தில் திருப்புமுனையை தங்களது கூட்டணி ஏற்படுத்தும் எனவும் அவர் கூறினார்.