ஊரெல்லாம் ஒரு மாதிரியான நிலவரம்.. தேமுதிகவினரின் மனதில் மட்டும் கவலை கலவரம்!
Recommended Video
சென்னை: தேமுதிகவினர் அத்தனை பேரும் பெரும் கவலையில் உள்ளனராம். இது எதிர்பார்த்த கவலைதான்.. ஆனால் அவர்களால் இந்த கவலையைத் தாங்க முடியவில்லையாம்.
கிட்டத்தட்ட அத்தனை எக்ஸிட் போல் கருத்துக் கணிப்புகளிலும் தேமுதிகவுக்கு ஒரு சீட் கூட கிடைக்காது என்றே கூறப்பட்டுள்ளது. இதற்கு கருத்துக் கணிப்பெல்லாம் உண்மையில் தேவையே இல்லை. கட்சித் தலைமை நடந்து கொண்ட விதத்தைப் பார்த்து தேர்தலுக்கு முன்பே தேமுதிக வீழ்ச்சியைச் சந்திக்கும் என்றே பலரும் கூறி வந்தனர்.
அதிமுகவுடன் ஒரு பக்கம் பேச்சு, திமுகவுடன் ரகசிய பேரம் என எந்தவிதமான தர்மமும் இல்லாமல் அதிரடி காட்டிய கட்சி தேமுதிக. தன்னைத் தேடி அத்தனை பேரையும் வர வைத்த கட்சி தேமுதிக. ஸ்டாலினே வீடு தேடிப் போக வேண்டிய நிலை வந்தது. கமல்ஹாசனும், சீமானும் மட்டும்தான் விஜயகாந்த் வீட்டுக்குப் போகவில்லை.
டெல்லி கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பங்கேற்பார்.. பாமக பாலு அறிவிப்பு
தேமுதிகவின் 4 சீட்
அதிமுகவை கிட்டத்தட்ட அனத்தி அனத்தியே 4 சீட்களை வாங்கியது. இன்ன பிற சலுகைகளையும் அது வாங்கியதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் வேட்பாளர்களை அந்த அளவுக்கு கட்சித் தலைமை அரவணைக்கவில்லை என்று கூறப்படுகிறது. குறிப்பாக பிரச்சார செலவுக்குக் கூட காசு தரவில்லை என்ற புகார்களும் உள்ளன.
வேட்பாளர்களுக்கு வந்த கஷ்டம்
திண்டுக்கல் வேட்பாளர் ஜோதிமுத்துவுக்கு போட்டுக்க நல்ல சட்டை கூட இல்லை. திண்டுக்கல் சீனிவாசன் சில செட் நல்ல சட்டை வாங்கிக் கொடுத்து கம்பீரமாக வலம் வர வைத்தார். திருச்சி வேட்பாளருக்கு செலவுக்குக் காசு இல்லாமல் கட்சித் தலைமையுடன் மோதிய விவகாரமும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கள்ளக்குறிச்சி மீது கவனம்
தேமுதிகவின் மொத்த உழைப்பும், கவனமும், கள்ளக்குறிச்சி மீது திருப்பப்பட்டது. சுதீஷ் எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்று அங்கு குறி வைத்து செலவு செய்து தீவிரப் பிரச்சாரம் செய்தனர். இதனால் தேமுதிகவின் வெற்றி வாய்ப்பு குறித்து தேர்தல் பிரச்சாரத்தின்போதே கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தன.
பிரச்சாரம் சரியில்லை
மறுபக்கம் விஜயகாந்த் சரியாக பிரச்சாரம் செய்யவில்லை. சென்னையில் மட்டும் அவர் ஒரு சுற்று சுற்றி வந்தார். அவ்வளவுதான். அத்தோடு சரி. மொத்தத்தில் திருவிழாவில் காணாமல் போன குழந்தைகள் நிலையில்தான் தேமுதிக வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்து வந்தனர். இந்த நிலையில் எக்ஸிட் போல் முடிவுகள் கட்சியினரை கலவரத்தில் ஆழ்த்தியுள்ளனவாம்.
கமல் சீமான் ரஜினி
ஒரு சீட் கூட கிடைக்காமல் போனால் கட்சியின் எதிர்காலம் பெரும் கேள்விக்குறியாகி விடும் என்று தேமுதிகவினர் அச்சத்தில் உள்ளனர். மறுபக்கம் சீமான், கமல் கலக்கிக் கொண்டிருக்கின்றனர். ரஜினி வேறு வரப் போகிறார். எனவே தேமுதிகவின் எதிர்காலம் பெரும் கேள்விக்குறியில் உள்ளதாக அவர்கள் கவலையுடன் உள்ளனர்.