வாக்குச் சாவடிகளை கைப்பற்ற ஆளும்கட்சி திட்டம்.. திமுக பரபரப்பு புகார்!
Recommended Video
சென்னை: வாக்குச் சாவடிகளை கைப்பற்ற ஆளும் கட்சி திட்டமிட்டுள்ளதாக திமுக பரபரப்பு புகாரை கூறியுள்ளது.
தமிழகத்தில் 38 லோக்சபா தொகுதிகளுக்கும் 18 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றன. இந்த நிலையில் பெரும்பாலான இடங்களில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பழுதடைந்தன.
இதுகுறித்து திமுக சட்டத் துறை செயலாளர் ஆர் கிரிராஜன், ஆணையர், டிஜிபிக்கு தனது புகார் கடிதத்தை அனுப்பியுள்ளார்.
கூட்டணி கட்சி
அதில் அவர் கூறுகையில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தொகுதிகளிலும் வாக்குப் பதிவு துவங்கிய காலை முதலே வாக்காளர்கள், திமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பெருந்திரளாக வாக்களித்து வருவதை ஆளும்கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
திட்டம்
மாலை 3 மணிக்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு தொகுதிகளுக்கு உள்பட்ட வாக்குச் சாவடிகளை கைப்பற்றிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இதற்கு காவல் துறையினரும் ஒத்துழைப்பு தரும் வகையில் காவல் துறையினர் பாதுகாப்பை திரும்ப பெற திட்டமிட்டுள்ளது. வாக்குச் சாவடிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை அந்த நேரத்தில் செயலிழக்கச் செய்யப் போவதாகவும் தகவல்கள் வந்துள்ளது.
கடிதத்தில் வேண்டுகோள்
இதன் மீது தேர்தல் ஆணையம் உடனடியாக தடுத்து நிறுத்திட உரிய நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும். நியாயமான மற்றும் வெளிப்படையான தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என கடிதத்தில் கூறியுள்ளார்.
|
தலைமை தேர்தல் ஆணையருக்கு கடிதம்
குறிப்பாக தருமபுரி மக்களவை தேர்தல் வாக்குச்சாவடிகளையும் 18 தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குச் சாவடிகளையும் கைப்பற்றலாம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.