நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்... சபலமில்லாதவர்களுக்கே வாய்ப்பு... உஷாரான திமுக
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளர்களை தேர்வு செய்யும் விவகாரத்தில் அதி கவனத்துடன் செயல்படுமாறு திமுக மாவட்டச் செயலாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
ஆளுங்கட்சியால் பணத்தாசையை காட்டி விலைக்கு வாங்க முடியாத நபர்களை மட்டும் வேட்பாளராக தேர்வு செய்ய வேண்டும் என்றும், பணத்தை கண்டு சபலமடையும் ஒருவருக்கு கூட இந்த முறை வாய்ப்பு வழங்கக்கூடாது எனவும் திமுக தலைமை நினைக்கிறது. காரணம், கடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நடந்த சில கசப்பான சம்பவங்கள் தான் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது. சேலம், நீலகிரி, புதுக்கோட்டை, உள்ளிட்ட மாவட்டங்களில் திமுக சார்பில் வெற்றி பெற்றவர்கள் சிலரே மறைமுகத் தேர்தலில் சித்து வேலையை காட்டியிருந்தார்கள்.
இதனால் பல ஒன்றியங்களில் திமுகவை சேர்ந்த நபர் ஒன்றியச் சேர்மனாக வர முடியாத நிலை ஏற்பட்டது. புதுக்கோட்டையில் மாவட்ட ஊராட்சி தலைவர் பதவியே பறிபோனது. இதற்கு காரணமான திமுக மாவட்ட ஊராட்சி உறுப்பினர் யார் என்பது பற்றி இன்று வரை கண்டுபிடிக்க முடியவில்லை. இப்படி திரைமறைவு சித்து வேலைகளை செய்யாத வண்ணம், கட்சியின் மீது பிடிப்புடனும், தலைமை மீது விசுவாசத்துடனும் இருக்கும் நபர்களுக்கு மட்டுமே சீட் வழங்க வேண்டும் என்பதில் மு.க.ஸ்டாலின் மிக உறுதியாக இருக்கிறார்.
அந்த வகையில் திமுக மாவட்டச் செயலாளர்களும் இப்போதே அது தொடர்பான பணிகளில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டனர். நேரடி அறிமுகம் உள்ளவர்களுக்கு மட்டுமே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சீட் வழங்க திமுக மாவட்டச் செயலாளர்கள் தீர்மானித்துள்ளனர். மற்றபடி கட்சியில் புதிதாக இணைந்தவர், பணம் இருப்பவர் என்ற தகுதியை எல்லாம் ஒரங்கட்டி வைக்க அவர்கள் முடிவெடுத்துள்ளனர். இதனிடையே நகர்மன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடஇப்போதே அனைத்து மாவட்டங்களிலும் கடும் போட்டி நிலவத் தொடங்கியுள்ளது.
சட்டமன்ற கூட்டத்தொடர் முடிந்த கையோடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளில் தமிழக தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது.