அதிமுக 1, திமுக 2.. தேமுதிக அதுவும் கிடையாது.. பாமக சுத்தம்.. பெண்களை புறக்கணித்த பெரிய கட்சிகள்
அதிமுக, திமுகவில் வெறும் 3 பெண் வேட்பாளர்களே களமிறக்கப்பட்டுள்ளனர்.
சென்னை: இதுவே ஜெயலலிதா, கருணாநிதி இருந்திருந்தால் நிலைமையே வேறு. வெறும் 3 பெண் வேட்பாளர்கள் என்றால் இந்நேரம் 2 பேரும் சும்மா இருந்திருப்பார்களா என்ன?
போனமுறை அதாவது 2014 -ம் ஆண்டு 39 தொகுதியில் தேர்தல் நடந்தது. அப்போது அனைத்து கட்சி சார்பிலும் மொத்தம் 11 பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். ஆனால் ஜெயலலிதா மட்டும் அதிமுக சார்பில் 4 பெண்களுக்கு வாய்ப்பு தந்தார்.
திருப்பூரில் வி. சத்யபாமா, திருவண்ணாமலையில் வனரோஜா, தென்காசியில் வசந்தி, காஞ்சிபுரத்தில் மரகதம் என போட்டியிட்டு, இவர்கள் 4 பேருமே வெற்றி பெற்றார்கள் என்பது வேறு விஷயம்.
ஆஹா.. வெந்த புண்ணில் விரலை விட்டு பாய்ச்சுதே இந்த இந்து மக்கள் கட்சி
தமிழச்சி தங்கபாண்டியன்
ஆனால் இப்போது, இந்த எண்ணிக்கை குறைந்து விட்டது. திமுக, அதிமுக என சேர்த்து பார்த்தாலும் 3தான் கணக்கு வருகிறது. திமுகவை பொறுத்தவரை தூத்துக்குடியில் கனிமொழியும், தென் சென்னையில் தமிழச்சி தங்க பாண்டியனும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவருமே வாரிசுகள் என்பது வேறு விஷயம். அதேபோல, அதிமுக சார்பில் ஒரே பெண் வேட்பாளர்தான் மரகதம் குமரவேல் காஞ்சிபுரம் தொகுதி சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஒருவர்கூட இல்லை
இதைவிட மோசம், 7 தொகுதிகளில் போட்டியிடும் பாமக ஆகட்டும், 4 இடங்களில் போட்டியிடும் தேமுதிக ஆகட்டும், தலா ஒரு இடத்தில் போட்டியிடும் புதிய தமிழகம், புதிய நீதி கட்சி, போன்றவறை ஆகட்டும் பெண் வேட்பாளர்களை களமிறக்கவில்லை.
வெறும் பேச்சுதானா?
"33 சதவீத இடஒதுக்கீடு மசோதா வேண்டும் என்று மக்களவையில் குரல் கொடுத்தால் மட்டும் போதுமா? அதை செயல்பாடுகளில் காட்ட வேண்டாமா இந்த திராவிட கட்சிகள்" என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை இடஒதுக்கீடு சட்டமாக்கினால்தான் இந்த பாலின வேறுபாடு களையப்படுமா? அல்லது தனி தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது போல பெண்கள் தொகுதியும் ஒன்று ஒதுக்கினால்தான் இந்த நிலைமை சரியாகுமா என்றும் தெரியவில்லை.
ஜெ., கருணாநிதி
இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு எதிரான அநீதிகள் நிகழ அதிகமான வாய்ப்புள்ள சூழலில் வெறும் 3 பெண் வேட்பாளர்கள்தான் என்பது தமிழகத்தின் அவலம் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் கண்டிப்பாக ஜெயலலிதா, கருணாநிதி இருவரில் யார் இருந்திருந்தாலும் இதை ஒருக்காலும் அனுமதித்தே இருக்க மாட்டார்கள்.
சீமான்
இந்த விஷயத்தில் சீமானை பாராட்டாமல் இருக்க முடியாது. 40 தொகுதிகளில் சரிபாதி 20 பெண்களுக்கு என்று அறிவித்துள்ளார். இன்னைக்கு வந்த சீமானுக்கு தெரிந்த விஷயம்கூட 50 வருடமாக ஆளும் திராவிட கட்சிகளுக்கு தெரியவில்லையே என்பது ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும், வேதனையாகவும் உள்ளது.