காஷ்மீர் மறு சீரமைப்பு சட்டத்தை நிறுத்தி வையுங்கள்..திமுக தலைமையிலான அனைத்து கட்சி கூட்டம் தீர்மானம்
சென்னை: காஷ்மீருக்கான புதிய சட்டத்தை நிறுத்திவைக்க வேண்டும் என்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக திமுக ஏற்பாட்டில் அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று மாலை அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், காங்கிரஸ் சார்பில் தங்கபாலு, திராவிடர் கழக தலைவர் வீரமணி, ரவிபச்சமுத்து மற்றும் தமிமுன் அன்சாரி உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்ற தீர்மானத்தில், காஷ்மீருக்கான புதிய சட்டத்தை நிறுத்தி வைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அதில் கூறியிருப்பதாவது: பிரதமர் மோடியின் 2வது ஆட்சிக் கப்பல் தொடக்கத்திலேயே தரை தட்டிவிட்டது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய பெரும்பான்மை மசோதாக்கள் ஜனநாயகத்திற்கு எதிரானவை.
பாஜக அரசால் அரசியல் சட்டமும் அதன் நோக்கங்களும், அமைப்புகளும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்றன. வீட்டுக்காவலில் உள்ள காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் உள்ளிட்டோரை உடனே விடுதலை செய்ய வேண்டும். இவ்வாறு தீர்மானத்தில் அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் திமுக தலைவர் ஸ்டாலின் கூறியதாவது: காஷ்மீர் பிரச்சனை குறித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றிருக்கக் கூடிய தலைவர்கள் அடங்கிய ஓர் அனைத்து கட்சி கூட்டம் இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.
அந்த கூட்டத்தில் காஷ்மீரில் நிலவக் கூடிய பிரச்சினைகள் குறித்து முழுமையாக அலசி ஆராயப்பட்டு, அந்த அடிப்படையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறோம். தீர்மானத்தின், முக்கிய அம்சமாக, மத்திய அரசு உடனடியாக நாடாளுமன்றத்தில் இடம் பெற்றிருக்கக் கூடிய கட்சிகள் அடங்கிய தலைவர்கள் குழுவை அனைத்து கட்சி குழுவாக அமைத்து, காஷ்மீருக்கு அனுப்பி வைத்து அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடி உண்மைநிலையை நாட்டு மக்களுக்கு தெரிவித்திட உடனடியாக மத்திய அரசு ஏற்பாடு செய்ய முன்வர வேண்டும்.
தொடர்ந்து, மேற்கொண்டு என்ன நிலைமைகள் உருவாகிறது, என்பதை கூர்ந்து கவனித்து, மீண்டும் இதே போன்ற அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை அந்த கூட்டத்தில் உறுதியாக முடிவு செய்ய இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.