நீட் தேர்வு: சட்டசபையில் புயலை கிளப்பிய ஸ்டாலின்.. நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பிய திமுக எம்பிக்கள்
டெல்லி: நீட் விலக்கு மசோதா ரத்து செய்தது குறித்து மத்திய அரசு பதில் அளிக்காததுக்கு லோக்சபாவில் கடும் எதிர்ப்பு தெரிவித்த தமிழகத்தைச் சேர்ந்த திமுக கூட்டணி எம்.பிக்கள் ஆவேச முழக்கமிட்டதோடு, லோக்சபாவில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக சட்டசபையில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட இரண்டு மசோதாக்களையும் மத்திய அரசு நிராகரித்தது. ஆனால் நீண்ட காலமாக இதைபற்றி மௌனம் காத்த மத்திய அரசு, உயர்நீதிமன்ற விசாரணையின்போது சமீபத்தில் தான் வெளிப்படையாக அறிவித்தது.
மத்திய அரசின் இந்த செயலை வண்மையாக கண்டிப்பதாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
கர்நாடக அரசியலில் செம ட்விஸ்ட்.. பாஜகவை உடைத்து பதிலடி கொடுக்கும் காங்கிரஸ்! பாஜக எம்எல்ஏ மாயம்
சட்டப்பேரவையின் ஆணி வேர்
இன்று சட்டசபையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் ‘சட்டப்பேரவையின் ஆணி வேரை அசைத்துப் பார்த்த மத்திய அரசின் செயலை கண்டிக்கவேண்டும். நீட் தேர்வு விலக்கு தொடர்பான மசோதாக்களை நிராகரித்த மத்திய அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றவேண்டும். நீட் தேர்வு தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றக் கூறிய மத்திய அரசு, இப்போது அந்த தீர்மானத்தையே நீர்த்துப் போக செய்துள்ளது' என்றார்.
ஸ்டாலின் வேண்டுகோள்
இதற்கு பதிலளித்து பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நீட் மசோதாக்களை நிராகரித்த மத்திய அரசைக் கண்டித்து சட்டசபையில் தீர்மானம் கொண்டு வர முடியாது என்றார். மத்திய அரசைக் கண்டித்து தீர்மானம் வேண்டாம் என்றால், மத்திய அரசை வலியுறுத்தியாவது தீர்மானம் போடுங்கள் என ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
தமிழக எம்பிக்கள் வெளிநடப்பு
இது ஒருபுறம் எனில் லோக்சபாவில் நீட் விலக்கு மசோதா ரத்து செய்தது குறித்து மத்திய அரசு பதில் அளிக்கவில்லை. இதனை கண்டித்து தமிழகத்தைச் சேர்ந்த திமுக கூட்டணி எம்பிக்கள் லோக்சபாவில் இருந்த வெளிநடப்பு செய்தனர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது.
திமுக எம்பிக்கள் வெளிநடப்பு
இதேபோல் நீட் விலக்கு மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதை கண்டித்து மாநிலங்களவையில் திமுக, இந்திய கம்யூனிஸ்டு கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர். எனினும் மத்திய அரசு நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் மசோதா நிராகரிக்கப்பட்டது குறித்து இதுவரை நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலுமே தற்போது வரை பதில் அளிக்கவில்லை.