எல்லாம் காங்கிரசால வந்தது.. திமுக கூட்டணியில் ஒரே குழப்பம்
Recommended Video
சென்னை: எல்லாம் காங்கிரசால வந்தது.. இப்போ பாருங்க ஆளாளுக்கு வம்பு பண்றாங்க என அங்கலாய்க்கிறார்கள், திமுக வட்டாரத்தில்.
அப்படி என்னதான் நடக்கிறது தொகுதி பங்கீட்டில் என கொஞ்சம் எட்டிப் பார்த்தோம். பெரும் களேபரமே நடந்து கொண்டுள்ளது திமுக கூட்டணி கட்சிகள் இடையே என்று அப்போதுதான் தெரியவந்தது.
இத்தனைக்கும் பிள்ளையார் சுழி போட்டது காங்கிரஸ்தான்.
பஞ்சாயத்து
கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு 10 தொகுதிகளை வாரிக் கொடுத்ததே திமுக.. அப்புறம் என்ன பஞ்சாயத்து வந்துவிடப்போகிறது என்கிறீர்களா, பஞ்சாயத்தே அங்கேதான் ஆரம்பம். "திண்ணையில் படுத்து கிடந்தவருக்கு திடுக்குன்னு வந்துச்சாம் வாழ்வு" என்பதைபோல, துள்ளிக் குதித்து கொண்டாடிக் கொண்டிருக்கிறது காங்கிரஸ்.
எல்லோரும் கேட்குறாங்க
ஆனால், திண்டாட்டம் என்னவோ, திமுகவுக்குதான். காங்கிரசுக்கே அத்தனை சீட் அள்ளிக் கொடுத்தீங்களே, எங்களுக்கும் கொடுங்க என வம்பு செய்கிறது வைகோவின் மதிமுக. பாமகவுக்கு டஃப் கொடுக்கப்போறதே நாங்கதான். எங்களுக்கு மட்டும் கம்மியா என உறுமுகிறது சிறுத்தை. இதனால்தான் தொகுதி பங்கீட்டில் தாமதம் ஏற்பட்டு வருகிறதாம்.
கட்சிகள் கேட்கும் தொகுதிகள்
மதிமுக 3, விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட், இ.கம்யூனிஸ்ட் தலா 2 தொகுதிகளையும், கேட்டுவருவதால் ஷாக் ஆகியுள்ளது திமுக தலைமை. ஆளுக்கு ஒரு சீட் மட்டுமே கொடுக்கலாம் என்று கேஷுவலாக இருந்த திமுக தலைமைக்கு இந்த டிமாண்ட் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. எனவேதான், இதுவரை நடைபெற்ற கூட்டணி பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் அறிவிக்கப்படவில்லை.
சிங்கிள் போதாது
2016 சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ஆனால் காங்கிரஸ் வென்றது, வெறும் 8 தொகுதிகளில்தான். இப்படியிருக்கும்போது, காங்கிரசுக்கே 10 லோக்சபா தொகுதிகளை ஒதுக்கிவிட்டு, எங்களுக்கு சிங்கிள் சீட்டுகளை கொடுத்தால் மரியாதையாக இருக்காது என கோரசாக கூறுகிறார்களாம், திமுக கூட்டணி கட்சிகள். "இதற்குத்தான் சொன்னோம், காங்கிரசுக்கு ஏன் இத்தனை சீட்டுன்னு....? மத்தியில் ஆளும் கட்சியாக இருந்தாலும், நாட்டிலேயே அதிக மாநிலங்களில் ஆட்சியில் இருக்கும் கட்சியாக இருந்தாலும், பாஜகவிற்கு, அதிமுக கூட்டணியிலல் வெறும் 5 சீட்தான் கொடுத்துள்ளார்கள். ஆனால், பலவீனமாக உள்ள காங்கிரசுக்கு 10 தொகுதி கொடுத்தது தப்புங்க" என சீனியர் திமுக தலைவர்கள் தலைமையிடம் புலம்புகிறார்களாம்.
துரைமுருகன் முயற்சி
மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒரு சில இடங்களில் மட்டுமே செல்வாக்கு கொண்டவை. ஆனால் காங்கிரஸ் அப்படியில்லை. தமிழகம் முழுக்க பரவலாக ஓட்டு வங்கி வைத்துள்ளது. அவர்களை உங்களோடு ஒப்பிடாதீர்கள் என சிரித்தபடியே கலாய்த்து வருகிறாராம் திமுக பேச்சுவார்த்தை குழுவில் உள்ள துரைமுருகன். ஆனால், காங்கிரசையே கை காட்டியபடி மற்ற கட்சிகள் விடாப்பிடியாக நிற்பதால் திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இன்னும் நிறைவடையவில்லை.