திருமாவளவன் போதும் என்கிறார்.. டி.ஆர்.பாலு வேண்டும் என்கிறார்.. திமுக கூட்டணியில் நடப்பது என்ன?
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் திமுக பொருளாளரும், மூத்த தலைவருமான டி.ஆர்.பாலு இருவரும் நேர் எதிராக மாறுபட்ட கருத்துக்களை கூறியுள்ளனர். திமுக கூட்டணி எப்படி அமைய வேண்டும் என்பது தொடர்பாக இருவருமே நேர்மாறான கருத்துக்களை கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த லோக்சபா தேர்தலின்போது தேனி தொகுதி தவிர்த்து பிற அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது.
எனவே அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலின் போதும் அதே கூட்டணியுடன் திமுக களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
புதிய விவசாய சட்டங்களை ஆதரித்து அதிமுக-பாஜக கூட்டம் நடத்த முடியுமா? கொங்கு ஈஸ்வரன் கேள்வி
திமுக கூட்டணியில் பாமக
இருப்பினும் சமீப காலமாக திமுக கூட்டணிக்கு பாமக வர உள்ளதாக ஒரு பேச்சு அரசியல் வட்டாரத்தில் சுற்றி வருகிறது. திமுக மற்றும் பாமக ஆகிய இரு கட்சிகளுமே இவ்வாறு வெளிப்படையாகக் கூறாவிட்டாலும் கூட, சில சிக்னல்கள் அதை நோக்கியதாக இருப்பதை அரசியல் பார்வையாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
பாமகவின் அவசியம்
திமுக கூட்டணியில் பாமக இருந்தால் வட தமிழகம், கொங்கு மண்டலம் போன்ற பகுதிகளில் அதிமுகவின் செல்வாக்கை குறைத்து, திமுக கூட்டணி அதிக தொகுதிகளை வெல்ல முடியும் என்ற ஒரு கணக்கை, திமுகவில் உள்ள சில தலைவர்கள் அதன் தலைமைக்கு முன் வைத்து வருகிறார்கள். அறுபடை வீடு கொண்ட கடவுளின் பெயர் கொண்ட திமுக சீனியர் ஒருவர், பாமகவை எப்படியாவது இந்த கூட்டணியில் இணைத்துவிட வேண்டும் என்று நீண்ட காலமாக முயல்வதாகவும் தகவல் உண்டு.
விடுதலை சிறுத்தைகள் கட்சி
பாமக, திமுக கூட்டணிக்கு வந்தால், ஏற்கனவே இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் தொடர்ந்து அங்கு கூட்டணியை நீடிக்காது என்று தெரிகிறது. எனவே திமுக கூட்டணியில் பாமக வருவதற்கு விடுதலை சிறுத்தைகள் ஒருபோதும் விரும்பாது. சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அளித்த ஒரு பேட்டி இதனை உறுதி செய்வதாக இருந்தது.
புது கட்சி தேவையில்லை
திமுக கூட்டணிக்கு பாமக வருமா? அதற்கு நீங்கள் சம்மதிப்பீர்களா என்ற நிருபரின் கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன், உங்கள் கேள்வி யூகத்தின் அடிப்படையில் ஆனது. இருந்தாலும், திமுக கூட்டணியில் ஏற்கனவே 10 கட்சிகள் இருக்கின்றன. எனவே, கூடுதலாக மேலும் பல கட்சிகளை கூட்டணியில் இணைக்க வேண்டும் என்பதற்கான தேவை இருப்பதாக நான் உணரவில்லை. இப்போதே தேர்தலில் வெல்ல போதிய வலிமை திமுக கூட்டணிக்கு உள்ளது. மக்கள் ஆதரவு உண்டு என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இவ்வாறு திருமாவளவன் தனது பேட்டியில் தெரிவித்தார்.
டிஆர் பாலு பேட்டி
திருமாவளவன் அளித்த பேட்டியின் சாராம்சம் என்னவென்றால், பாமக, திமுக கூட்டணியில் இடம்பெற தேவை கிடையாது என்பதுதான். ஏற்கனவே திமுக கூட்டணிக்கு மக்கள் மத்தியில் ஆதரவு இருப்பதால் பாமக வந்துதான் திமுக கூட்டணிக்கு அதிக இடங்கள் கிடைக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது என்பதை மறைமுகமாக அவர் கூறியதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்தனர். ஆனால் திமுக மனநிலை எப்படி இருக்கிறது என்பதற்கு அக்கட்சியின் பொருளாளர் டிஆர் பாலு இன்று அளித்துள்ள பேட்டி சமிக்ஞை கொடுத்துள்ளது.
மாறுபட்ட கருத்து
திருவாரூரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிஆர் பாலுவிடம், நிருபர்கள் கூட்டணி பற்றிய கேள்வி எழுப்பியபோது, சட்டசபை தேர்தலுக்கு முன்பாக, திமுக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் வந்து இணையும் வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தார். திருமாவளவன் முன்வைத்த கருத்துக்கு முற்றிலும் மாறாக அமைந்துள்ளது டி.ஆர்.பாலு பேட்டி. திமுக கூட்டணிக் கட்சிகளுக்கிடையே ஒருமித்த கருத்து இல்லை என்பதை இது சுட்டிக் காட்டுவதாக அமைந்துள்ளது.
கூட்டணியில் எந்த கட்சி?
திருமாவளவன் சுட்டிக் காட்டியது போல, திமுக கூட்டணியில் ஏற்கனவே 10 கட்சிகள் உள்ளன. இது தவிர்த்து, அதிமுக கூட்டணியில் உள்ள பெரிய கட்சிகள் என்று பார்த்தால், பாமக மற்றும் தேமுதிக ஆகியவைதான். கண்டிப்பாக, பாஜக திமுக கூட்டணிக்கு வரப்போவது கிடையாது. பாமகவை திமுக கூட்டணியில் எப்படியாவது கொண்டு வந்து சேர்த்து விட வேண்டும் என்ற முயற்சி தான் நடக்கின்றன. பாலு, பாமகவை மனதில் வைத்துதான் இந்த பேட்டி அளித்தாரா என்ற கேள்வி திமுக கூட்டணிக்குள் எதிரொலிக்க தொடங்கியுள்ளது. முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் அதிமுகவிற்குள் குழப்பம். திமுக கூட்டணியில் யார், யார் இருக்க போகிறார்கள் என்பதும் முடிவுக்கு வராத கன்னித்தீவு கதையாக தொடர்கிறது.