தி.மு.க. ஒதுக்கிய தொகுதிகள்.. அதிர்ச்சியில் காங்கிரஸ் தலைவர்கள்.. ராகுல் நிலைப்பாடு என்ன!
சென்னை: தி.மு.க. கூட்டணியில் 18 தொகுதிகள் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட சொல்லப்படுகிறது. ஆனால் இவ்வளவு குறைவான அளவில் தொகுதிகளை ஏற்க காங்கிரஸ் தலைவர்கள் மறுத்து வருகிறார்களாம். ராகுலிடமும் ஏற்க வேண்டாம் என கூறி வருகிறார்களாம். கூடுதல் தொகுதி கேட்டு திமுகவிற்கு தொடர்ந்து காங்கிரஸ் அழுத்தம் கொடுத்து வருகிறது.
சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. ஏப்ரல் 6ம் தேதி தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் திமுக காங்கிரஸ் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை முதற்கட்டமாக அண்மையில் நடந்து முடிந்தது.
அப்போது ராகுல்காந்தியின் சிறப்பு தூதராக அனுப்பப்பட்ட முன்னாள் கேரள முதல்வர் உம்மன்சாண்டி, அகில இந்திய செயலாளர் சுர்ஜித்சிங், தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, கே.ஆர்.ராமசாமி ஆகியோர் அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. பேச்சுவார்த்தை குழுவுடன் பேசினார்கள். சுமார் 55 நிமிடங்கள் வரை பேசினார்கள்.
50 தொகுதிகள்
அப்போது காங்கிரஸ் தரப்பில் 57 தொகுதிகள் கேட்கப்பட்டதாம். 50 தொகுதிகளாவது ஒதுக்க வேண்டும் என்ற ராகுல் காந்தியின் கடிதத்தையும் அவர்கள் திமுக தலைவர்களிடம் கொடுத்தனர். தி.மு.க. தரப்பில் தொகுதி எண்ணிக்கையை குறைக்கும் படி கேட்டார்கள். இதையடுத்து கடந்த தேர்தலில் ஒதுக்கியதை போல் 41 தொகுதிகளாவது கட்டாயம் வேண்டும் என்று காங்கிரஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டதாம்
ஆட்சிக்கு வரமுடியவில்லை
ஆனால் தி.மு.க. தரப்பில் அதற்கும் சம்மதிக்கவில்லையாம். கடந்த தேர்தலில் அதிக சீட் ஒதுக்கியும் குறைந்த எண்ணிக்கையில் வெற்றி பெற்றதால், தி.மு.க. கூட்டணி கடந்த முறை ஆட்சிக்கு வர முடியாமல் போனது என்று திமுக தலைவர்கள் சுட்டிக்காட்டினார்களாம். மேலும் காங்கிரஸ் கட்சிக்கு உள்ள செல்வாக்கு பற்றியும் விவாதித்து உள்ளார்கள்
ராகுலிடம் பேச்சு
இறுதியாக 18 தொகுதிவரை தர முடியும் என்று தி.மு.க. தரப்பில் கூறப்பட்டதாம். அதை காங்கிரஸ் ஏற்க மறுத்துவிட்டதாம். இதனால் தான் திமுக காங்கிரஸ் இடையே உடன்பாடு ஏற்படவில்லையாம். இந்தநிலையில் தமிழகம் வந்துள்ள ராகுல்காந்தியை அகில இந்திய செயலாளர் சர்சஞ்சய்தத், தினேஷ் குண்டுராவ், ஸ்ரீவல்லபிரசாத், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், செல்லக்குமார், விஷ்ணுபிரசாத், ஜோதிமணி, திருநாவுக்கரசர், விஜயதரணி எம்.எல்.ஏ., முன்னாள் காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் உள்பட முக்கிய நிர்வாகிகள் சந்தித்து பேசியிருக்கிறார்கள்.
ஏற்க மறுப்பு
அப்போது 18 தொகுதிகளை ஏற்றுக்கொள்ளலாமா என்று ராகுல் காந்தி கேட்டிருக்கிறார் ஒட்டு மொத்தமாக அனைவருமே இவ்வளவு குறைந்த எண்ணிக்கையை ஏற்க கூடாது என்று கூறியிருக்கிறார்கள். திருநாவுக்கரசர் ஜோதிமணி, ஈவிகேஎஸ் இளங்கோவன் உள்பட சிலர் 25 முதல் 30 தொகுதிகள் ஒதுக்கினால் ஏற்றுக்கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார்கள். மற்றவர்கள் அனைவரும் 40 தொகுதிகளுக்கும் குறைவாக ஒப்புக்கொள்ள வேண்டாம். அதற்கு பதில் தனித்தே போட்டியிடலாம் என்றார்களாம். அனைவரது கருத்தையும் ராகுல் காந்தி கேட்டுக்கொண்டதுடன் அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் ஏற்படும் முன்னேற்றத்தை பொறுத்து முடிவெடுக்கலாம் என்று அப்போது கூறினாராம்.
காங்கிரஸ் 25
இதற்கிடையே திமுகவும் சுமார் 175 தொகுதிகளுக்கு மேல் போட்டியிட விரும்புகிறதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகளும், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 7 தொகுதிகளும், விடுதலை சிறுத்தைகள் மற்றும் மதிமுக-வுக்கு தலா ஐந்து தொதிகளும், இ.யூ.மு.லீக், மனித நேய மக்கள் கட்சி, கொ.ம.தே.க. ஆகியவற்றிற்கு தலா 2 தொகுதிகளும், தமிழக வழ்வுரிமை கட்சிக்கு ஒரு இடங்களும் ஒதுக்க திமுக திட்டமிட்டிருக்கிறதாம்.