சபாஷ் சரியான போட்டி... சட்டமன்றத்தில் திமுக-அதிமுக காரசார வாதம்
சென்னை: தமிழக சட்டமன்றத்தில் நீண்ட காலத்துக்கு பிறகு திமுக- அதிமுக இடையே ஹைட்ரோ கார்பன், சி ஏ ஏ உள்ளிட்ட விவகாரங்களை மையமாக வைத்து காரசார விவாதம் நடைபெற்றுள்ளது.
சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது பேசிய எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன், வேளாண் மண்டலம் தொடர்பாக சட்டமன்றத்தில் ஏன் தீர்மானம் நிறைவேற்றவில்லை என கேள்வி எழுப்பினர்.
அவருக்கு பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, டெல்டா மாவட்டங்களை வேளாண் மண்டலமாக மாற்ற திமுக எம்.பிக்கள் ஏன் முயற்சி செய்யவில்லை என ஸ்டாலினை நோக்கி கேள்வி எழுப்பினர்.
சிஏஏவுக்கு எதிராக வலுக்கும் போராட்டம்.. பக்கா சிக்கலில் அதிமுக... என்ன செய்யும் தமிழக அரசு?
ஹைட்ரோ கார்பன்
சட்டமன்றம் என்றாலே எதிர்க்கட்சிகள் வெளிநடப்பும், ஆளுங்கட்சி அறிக்கை வாசிப்பும் தான் என இருந்த நிலையில், இன்று திடீர் திருப்பமாக ஆளுங்கட்சி-எதிர்க்கட்சி இடையே காரசார வாதம் நடைபெற்றது. ஹைட்ரோ கார்பன், சி ஏ ஏ, உள்ளிட்ட விவகாரங்களை வைத்து பேரவையில் புயலை கிளப்பியது திமுக. எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் தமிழக அரசை விமர்சித்தும், முதலமைச்சரின் செயல்பாடுகளை விமர்சித்தும் ஹைட்ரோ கார்பன் விவகாரத்தில் கேள்வி எழுப்பினார். இதனால் கோபத்துடன் எழுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி 3-வது கட்சி என பெருமை பேசுகிறீர்களே டெல்டாவை பாதுகாக்க உங்கள் கட்சி எம்.பி.க்கள் என்ன செய்தார்கள் என பாய்ந்தார்.
எதிரும் புதிரும்
இதையடுத்து அவருக்கு பதிலளிக்க எழுந்த துரைமுருகன், மத்திய அரசுடன் நாங்கள் எதிரும்-புதிருமாக உள்ள நிலையில் நாங்கள் சொன்னால் அவர்கள் எப்படி கேட்பார்கள், எங்கள் கோரிக்கையை எப்படி நிறைவேற்றுவார்கள் எனத் தெரிவித்தார். மேலும், நீங்கள் தான் மத்திய அரசுடன் ஒட்டி உறவாடி இணக்கமாக உள்ளீர்கள், அதனால் உங்கள் பேச்சைதானே அவர்கள் கேட்கக்கூடும் என கூறினார். மேலும், வேளாண் மண்டலம் தொடர்பாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஏன் சட்டம் கொண்டுவரவில்லை என வினவினார்.
யார் சீட்டை தேய்ப்பது?
இதனிடையே மின் இணைப்புகள் குறித்து பதிலளித்து பேசிய அமைச்சர் தங்கமணி, விவசாயிகளுக்கு தட்கல் மின் இணைப்பு மூலம் 30,000 மி இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்ததுடன் திமுகவை விமர்சித்து சில கருத்துக்களை கூறினார். அதிமுகவில் 37 எம்.பி.க்கள் இருந்த போது அவர்கள் நாடாளுமன்றத்தில் சீட்டை தேய்த்துவிட்டு வருவதாக திமுக கூறியது, இப்போது உங்கள் கட்சி எம்.பி.க்கள் அங்கு (நாடாளுமன்றத்தில்) என்ன செய்கிறார்கள் என விமர்சித்தார். அமைச்சரின் இந்த கருத்துக்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கண்டனம்
இதனிடையே முன்னதாக சட்டப்பேரவைக்கு வந்த மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி, வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் நடத்தப்பட்ட தடியடியை கண்டித்து பதாகைகளை ஏந்தியபடி முழக்கங்கள் எழுப்பினார். குடியுரிமை சட்டம் தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கோரி முக்குலத்தோர் புலிப்படைகள் தலைவர் கருணாஸ் எம்.எல்.ஏ. சபாநாயகர் தனபாலிடம் மனு அளித்துள்ளார்.