கூட்டணி பற்றி பொதுவெளியில் பேசாதீர்கள்.. குள்ள நரி கூட்டம் காத்திருக்கு.. ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
Recommended Video
சென்னை: கூட்டணி தொடர்பாக பொதுவெளியில் பேசுவதை தவிர்க்க வேண்டும் என்று திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கு மு. க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி தர்மத்தை மீறி திமுக நடந்து கொண்டது என்று தமிழ் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதன் பிறகு திமுக பொருளாளர் துரைமுருகன் வெளியிட்ட ஒரு கருத்தில், திமுக கூட்டணியை விட்டு காங்கிரஸ் வெளியேற நினைத்தால் வெளியேறலாம் என்று தெரிவித்தார்.
இதற்கு காங்கிரஸ் எம்பி மாணிக்கதாகூர் பதிலடி கொடுக்கும் வகையில் பேசினார். அவர் கூறுகையில், ஸ்டாலின் முதலமைச்சராக திமுக தலைவர்களில் சிலர் தடுக்க முயற்சி செய்கிறார்கள் என்று குண்டை வீசினார்.
இதையடுத்து திமுக கூட்டணியில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளதாக அதிமுக தலைவர்கள் கிண்டல் செய்ய ஆரம்பித்தனர். நிலைமை விபரீதமானதை தொடர்ந்து ஸ்டாலினை நேரில் சந்தித்து நடந்த சம்பவங்கள் தொடர்பாக கே.எஸ்.அழகிரி விளக்கம் அளித்துள்ளார்.
சமாதானம் பேச போன இடத்தில் ரஜினியின் தர்பார் குறித்து பேசிய ஸ்டாலின்- கே எஸ் அழகிரி
இந்த சந்திப்பிற்கு பிறகு ஸ்டாலின் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில், திமுக காங்கிரஸ் கூட்டணி தொடர்பாக பொதுவெளியில் பேசுவதை இரு கட்சியினரும் தவிர்க்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
திமுக கூட்டணியில் சிறு ஓட்டையாவது, விழாதா என குள்ள நரி கூட்டங்கள் காத்துக்கிடக்கின்றன, அதற்கு நாம் இடம் தரக்கூடாது என்றும், ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.