மத்திய அரசுக்கு எதிராக திமுக கூட்டணியினர் தமிழகம் முழுவதும் கருப்பு கொடி போராட்டம்!
சென்னை: புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் மத்திய அரசுக்கு எதிராகவும் திமுக கூட்டணி கட்சியை சேர்ந்த தலைவர்களும் நிர்வாகிகளும் அவரவர் வீடுகளுக்கு முன்பு கருப்புக் கொடியேந்தி போராட்டம் நடத்தினர்.
Recommended Video
மத்திய பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பது தொடர்பாக, காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி தலைமையில், கடந்த மாதம் 20 ஆம் தேதி, எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக நடைபெற்றது.
இதில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, ஜார்க்கண்ட் முக்தி மோர்சா, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட 19 கட்சிகளின் முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பாஜக அரசின் மக்கள் விரோத, ஜனநாயக விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து நாடு முழுவதும் செப்டம்பர் 20 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை 10 நாட்கள் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் நடத்துவது உள்ளிட்ட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதை அடுத்து, இன்று (செப்டம்பர் 20) தி.மு.க., உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கண்டன போராட்டம் நடைபெறும் என்று கூட்டாக அறிவித்தனர். அதன்படி, காலை 10 மணிக்கு தங்களின் இல்லம் முன்பு திமுக மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கருப்புக் கொடி ஏந்தி மத்திய அரசைக் கண்டித்து போராட்டத்தை நடத்தினர். கொரோனா பரவல் காரணமாக பொது இடங்களில் கூட்டம் கூடுவதைத் தவிர்த்து விட்டு அவரவர் வீடுகளுக்கு முன்பு போராட்டம் நடத்தினர்.
கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தில் கருப்புக் கொடி!
சென்னை சிஐடி காலனியில் உள்ள தனது இல்லத்தின் முன்பாக கருப்புக் கொடி ஏந்தி கண்டன போராட்டத்தில் திமுக மகளிர் அணி செயலாளரும் எம்பியுமான கனிமொழி கருணாநிதி பங்கேற்றார். அது போல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அவரது கட்சி அலுவலகத்தில் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தினார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் கே பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர்மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் உள்ளிட்டோர் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர்.
திமுக எம்பி டி.ஆர் பாலு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனது அலுவலகத்திலும் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் இளைஞரணி அலுவலகமான அன்பகத்திலும் போராட்டம் நடத்தினர். பெட்ரோல் விலையை குறைத்திடு, வேளாண் சட்டங்களை ரத்து செய்திடு, பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்காதே போன்ற பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தப்பட்டது.