விவசாய சட்டம்: பச்சை துண்டு, மாஸ்க்.. பச்சை பசேல் வயலில் இறங்கிய ஸ்டாலின்.. கீழம்பியில் ஆர்ப்பாட்டம்
சென்னை: விவசாய மசோதாவுக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் இணைந்து இன்று போராட்டம் தொடங்கிய நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கீழம்பியில் பச்சை துண்டு, மாஸ்க் அணிந்து கொண்டு வயலில் இறங்கிய ஸ்டாலின் பின்னர் போராட்ட களத்திற்கு சென்றார்.
வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்கள் இரு அவைகளிலும் நிறைவேறியது.
இவை விவசாயிகளுக்கு எதிரானது என பாஜக கூட்டணி கட்சியிலிருந்த சிரோமணி அகாலி தளம் கூட்டணியிலிருந்து வெளியேறியது. இந்த விவசாய சட்டத்திற்கு தமிழகத்திலும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
ஓபிஎஸ் முகமூடி.... மும்முறை முதல்வரே! அம்மாவின் வாரிசே என்ற முழக்கத்தால் பதற்றம்
இன்று தொடங்கியது
இதையடுத்து கடந்த வாரம் அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. அப்போது செப்டம்பர் 28ஆம் தேதி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் இன்று தொடங்கியது. காஞ்சிபுரத்தில் நடைபெறும் போராட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று வருகிறார்.
பச்சை மாஸ்க்
முன்னதாக பச்சை துண்டு, பச்சை மாஸ்க் அணிந்து கொண்டு வேட்டியை மடித்துக் கட்டியபடி வயலில் இறங்கிய அங்கிருந்த பெண்களிடம் ஸ்டாலின் நலம் விசாரித்தார். வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த போது ஸ்டாலின் என்ன விவசாயியா என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
யார் எங்கு
சென்னை மேற்கில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கி வீரமணியும் கொருக்குபேட்டையில் கே எஸ் அழகிரியும் வள்ளுவர் கோட்டத்தில் உதயநிதியும், சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே கே பாலகிருஷ்ணனும் கும்பகோணத்தில் முத்தரசனும், கடலூரில் திருமாவளவனும் திருச்சியில் காதர் மொகிதீனும், சென்னை பெருங்குடி கந்தன்சாவடியில் வைகோவும் ரவி பச்சமுத்துவும் கலந்து கொண்டுள்ளார்கள்.
மா.சுவுக்கு கொரோனா
திமுக எம்எல்ஏ மா சுப்பிரமணியனும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளவிருந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் அவர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அவர் மனைவிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.