மோடிக்கு சப்போர்ட்.. காங்கிரஸ் தலைமைக்கு அழைப்பிதழ் கூட செல்லவில்லை.. திசை மாறுகிறார் ஸ்டாலின்?!
திமுக தலைவர் ஸ்டாலின் கடந்த சில நாட்களாக செய்து வரும் அரசியல் செயல்பாடுகள் எல்லாம் காங்கிரஸ் கூட்டணியை விட்டு அவரை கொஞ்சம் கொஞ்சமாக தூரமாக நகர்த்திக் கொண்டே இருக்கிறது.
சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின் கடந்த சில நாட்களாக செய்து வரும் அரசியல் செயல்பாடுகள் எல்லாம் காங்கிரஸ் கூட்டணியை விட்டு அவரை கொஞ்சம் கொஞ்சமாக தூரமாக நகர்த்திக் கொண்டு இருக்கிறது.
திமுக தலைவர் ஸ்டாலின், நாடு முழுக்க காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க பல கட்சிகள் அச்சம் தெரிவித்த போது கூட, தைரியமாக திமுக - காங்கிரஸ் கட்சியுடன்தான் திமுக கூட்டணி வைக்கும் என்று குறிப்பிட்டார். அதேபோல் லோக்சபா தேர்தலிலும் காங்கிரஸ் - திமுக கூட்டணி அமோக வெற்றிபெற்றது.
ஆனால் அந்த தேர்தலில் காங்கிரஸ் வட மாநிலங்கள் எதிலும் பெரிதாக வெற்றிபெறவில்லை. லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி மோசமாக தோல்வியை தழுவியது.
விலகி செல்கிறார்
இந்த தேர்தல் தோல்விக்கு பின் காங்கிரஸ் கட்சியிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக திமுக விலகி செல்வதாக பேச்சுகள் அடிப்பட்டு வருகிறது. திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று முதல்நாள் வேலூர் தேர்தல் பிரச்சாரத்தில் பேசியதும் இந்த சந்தேகத்தை அதிகப்படுத்தியது. அதில் ஸ்டாலின், மோடி நினைத்தால் ஒரே நாளில் தமிழகத்தில் ஆட்சி மாறும்; மாறக்கூடாது என அதிமுகவினர் அவர் காலிலேயே விழுந்து கிடக்கின்றனர்.
மொத்தமாக மாறும்
நிச்சயம் இந்த ஆட்சி கவிழப்போகிறதா இல்லையா என பொறுத்திருந்து பாருங்கள். ஏன் தற்போது கர்நாடகாவில் ஆட்சி கவிழவில்லையா?. அப்படித்தான் விரைவில் தமிழகத்திலும் ஆட்சி கவிழும். இனி தமிழக அரசியலில் நடக்க போகும் விஷயங்களை பொறுத்திருந்து பாருங்கள், என்று ஸ்டாலின் கூறியுள்ளார். அவரின் இந்த பேச்சு திமுக பாஜக பக்கம் செல்கிறதா என்ற கேள்வியை எழுப்பியது.
வேறு என்ன
அதேபோல் திமுக லோக்சபாவில் கூட கொஞ்சம் பாஜக தலைவர்களிடம் நல்ல பெயர் எடுத்து வருகிறது. கடந்த உபா சட்டதிருத்த மசோதாவை திமுக லோக்சபாவில் ஆதரித்தது. லோக்சபாவிற்கு வெளியே திமுக மசோதாவை எதிர்த்தாலும், வாக்கெடுப்பின் போது அதற்கு ஆதரவு அளித்தது. இதேபோல் மேலும் சில மசோதாக்களை திமுக ஆதரிக்கும் என்று கூறுகிறார்கள். இதெல்லாம் பாஜக - திமுக உறவை கொஞ்சம் சாத்தியமாக்கி வருகிறது.
என்ன முத்தாய்ப்பு
அதேபோல் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழா முரசொலி அலுவலகத்தில் ஆகஸ்ட் 7ம் தேதி நடைபெறவிருக்கிறது. இதற்கு காங்கிரஸ் தரப்பில் தமிழக தலைவர் கே எஸ் அழகிரி, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அழைக்கப்பட்டுள்ளனர். ஆனால் ராகுல் காந்தி, சோனியா காந்தி போன்ற தேசிய தலைவர்கள் அழைக்கப்படவில்லை.
சிக்கல்
இப்படி தேசிய காங்கிரஸ் தலைவர்களுக்கு திமுக அழைப்பிதழ் கொடுக்காமல் இருப்பது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஏன் ஸ்டாலின் இப்படி செய்தார் என்று காங்கிரஸ் வட்டாரத்தில் சிலர் குழப்பம் தெரிவித்துள்ளனர். பாஜகவுடன் நெருக்கமாக செல்ல திமுக திட்டமிடுகிறதா என்றும் சிலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.
இன்னொரு பக்கம்
அதே சமயம் ஆகஸ்ட் 7ம் தேதிக்கு முன் காங்கிரஸ் தேசிய தலைவர் மாற்றப்பட வாய்ப்புள்ளது. அதனால்தான் அக்கட்சியின் தேசிய தலைவர்களுக்கு இப்போது கடிதம் செல்லவில்லை. புதிய தலைவர் நியமனத்தை பொறுத்துதான் திமுக இதில் அடுத்த முடிவுகளை எடுக்கும் என்றும் கூறுகிறார்கள் .