தத்தளிக்கும் கேரளா.. கைகொடுக்கும் மு. க ஸ்டாலின்.. திமுக சார்பில் ரூ.1 கோடி நிவாரண நிதி அறிவிப்பு
சென்னை: கனமழையால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு உதவும் வகையில் அம்மாநில முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கப்படும் என்று திமுக அறிவித்துள்ளது.
கேரள மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாகவே நல்ல மழை பெய்து வருகிறது. தென்கிழக்கு அரபிக் கடலில் கடந்த வாரம் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை மேலும் வலுப்பெற்றதால் அங்கு மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது.
அதிலும் கடந்த சில நாட்களாகக் கேரளா முழுவதும் அதி தீவிர கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது.
கேரளா வெள்ளம், நிலச்சரிவு.. பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு.. தொடரும் மழையால் மீட்பு பணியில் சிக்கல்
கேரளா வெள்ளம்
இந்த கனமழையால் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளிலும் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்படும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாகத் திருவனந்தபுரம், கோட்டயம், பத்தனம்திட்டா, இடுக்கி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் மிக மோசமான வெள்ள சேதம் ஏற்பட்டுள்ளது. படகுகள், ஹெலிகாப்டர் மூலம் மக்களை மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன.
இடுக்கி அணை
வரும் அக்டோபர் 22 வரை கேரளாவில் கனமழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் பெய்து வரும் கனமழையால் நாட்டின் மிகப் பெரிய அணைகளில் ஒன்றான இடுக்கி அணி வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் அணையை ஓட்டியுள்ள பகுதிகளில் வசிப்போருக்கு ஆர்ஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மாநிலத்தின் முக்கிய அணைகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருகிறது.
Recommended Video
நிலச்சரிவு
இந்த கனமழை காரணமாகக் கேரள மாநிலத்தில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இடுக்கி மாவட்டம் கொக்காயர் கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலச்சரிவில் சிக்கி 35க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக 10 வயதுக்குட்பட்ட 3 குழந்தைகள் கட்டியணைத்தவாறு சடலங்களாக மீட்கப்பட்டனர்.
திமுக அறிவிப்பு
இந்நிலையில் கனமழையால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு உதவும் வகையில் அம்மாநில முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கப்படும் என்று திமுக அறிவித்துள்ளது. இது தொடர்பாக திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ''கேரள மாநிலத்தில் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கின் காரணமாகப் பேரழிவு ஏற்பட்டுள்ளது. பலர் உயிரிழந்திருக்கிறார்கள். ஆயிரக்கணக்கானோர் வீடிழந்து, இடப் பெயர்ச்சிக்கு ஆளாகியிருக்கிறார்கள். பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் சேதமடைந்திருக்கின்றன.
ஒரு கோடி ரூபாய்
பாதிப்புக்கு ஆளாகியிருக்கும் மக்களுக்கு ஆதரவு அளித்திடும் நோக்கில், திமுக அறக்கட்டளை சார்பாக கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாயை திமுக அறக்கட்டளையின் தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று (18.10.2021) வழங்குவதாக அறிவித்துள்ளார். இப்பெருவெள்ளத்தின் காரணமாக உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், பாதிப்புக்கு ஆளாகி இருப்போருக்கு ஆறுதலையும் திமுக தெரிவித்துக் கொள்கிறது'' என்று அதில் கூறப்பட்டுள்ளது.