பரபரப்பான அரசியல் சூழலில் திமுக பொதுக்குழு.. அக்.16-ல் கூட்டம்
Recommended Video
சென்னை: பரபரப்பான அரசியல் சூழல் திமுக பொதுக்குழு கூட்டம் அடுத்த மாதம் 16-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,
அக்டோபர் 16-ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் திமுக பொதுக்குழு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், கழக ஆக்கப்பணிகள், சட்டதிருத்தம், தணிக்கை குழு அறிக்கை பற்றி பேசப்படும் எனக் கூறப்பட்ட்டுள்ளது.
கர்நாடக காங்கிரசின் பெரும் தலைவர் டி.கே.சிவகுமார் திகார் சிறையில் அடைப்பு.. பண மோசடி வழக்கில் அதிரடி
காரசார விவாதம்
கருணாநிதி இருந்தவரை திமுக பொதுக்குழுவில் காரசார விவாதங்கள், அனல் பறக்கும் கேள்விகள், கருத்துமோதல்கள் என அனைத்தும் இருக்கும். வீரபாண்டி ஆறுமுகம், சாவல்பூண்டி சுந்தரேசன், தேனி மாவட்ட முன்னாள் செயலாளர் மூக்கையா, எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் என பலரும் கருணாநிதி முன்பாகவே யாருக்கும் அஞ்சாமல் மனதில் உள்ளதை பேசுவார்கள். வீரபாண்டி ஆறுமுகமும், ஜெ.அன்பழகனும் விவாதம் எல்லாம் செய்திருக்கிறார்கள். இப்படி அவர்களை எல்லாம் பேசவிட்டு கருணாநிதி ரசிப்பார். ஒரு போதும் கோபமோ, எரிச்சலோ அடையமாட்டார்.
ராஜதந்திரம்
மேலும், தான் சொல்ல நினைக்கும் கருத்தை மூத்த நிர்வாகிகளை பேச வைத்து அதன் மூலம் கட்சியினருக்கு கொண்டு செல்லும் ராஜதந்திரத்தை கையாண்டார் கருணாநிதி. இப்படி பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நடக்கும் அந்தக் கூட்டத்தின் முகம், அவர் உடல்நலம் குன்றி ஓய்வு தொடங்கியது முதல் மாறத்தொடங்கியது. பெயரளவுக்கு கூட்டம் நடத்தப்பட்டு அதில் ஒரு சில தீர்மானங்கள் மட்டும் நிறைவேற்றபட்டன.
முழு அதிகாரம்
இந்நிலையில் திமுக தலைவராக ஸ்டாலின் முழு அதிகாரத்தில் உள்ள சூழலில், பொதுக்குழு கூடுகிறது. ஆகையால் இந்தக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மேலும், இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டதற்கு பிறகு நடக்கும் முதல் கூட்டம் என்பதால், அதில் அவரும் பங்கேற்கவுள்ளார்.
சிறப்பு அழைப்பாளர்கள்
பொதுக்குழு உறுப்பினர்களை தவிர்த்து சிலரை சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கவும் திமுக தலைமை முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. பொதுக்குழுவில் சலசலப்பு ஏற்படாத வகையில் பார்த்துக்கொளளூம் பணியை மாவட்டச் செயலாளர்கள் கையில் எடுத்துள்ளனர்.