போலீஸ் தாக்குதலில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ. 25 லட்சம் திமுக நிதி உதவி- கனிமொழி வழங்கினார்
சென்னை: சாத்தான்குளம் போலீஸ் தாக்குதலில் உயிரிழந்த தந்தை, மகன் குடும்பத்துக்கு திமுக சார்பில் ரூ25 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
சாத்தான்குளத்தில் போலீஸ் தாக்குதலில் வர்த்தகர் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் பரிதாபமாக பலியாகினர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
லாக்டவுன் காலத்தில் கடையை திறந்து வைத்தனர் என்பதற்காக போலீசாரால் கொடூரமாக தாக்கப்பட்டு இருவரும் உயிரிழந்திருக்கின்றனர். இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து இன்று தமிழகம் முழுவதும் வர்த்தகர்கள் கடை அடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கனிமொழி Vs சசிகலா புஷ்பா.. ஒரே நாளில்.. மொத்தமாக ஸ்கோர் செய்த கனிமொழி.. சாத்தான்குளத்தில்!
திமுக ரூ. 25 லட்சம் நிதி உதவி
இக்கொடூர சம்பவத்தில் தொடர்புடைய போலீசார் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் தமிழக அரசு சார்பில் ரூ20 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜெயராஜ்- பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு திமுக சார்பில் ரூ25 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவை விட கொடூரம்
இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: கொரோனாவைவிடக் கொடூரமான முறையில் தமிழகக் காவல்துறை நடந்து கொண்ட காரணத்தால், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வணிகர்களான ஜெயராஜூம், அவரது மகன் பென்னிக்சும் அநியாயமாக அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஊரடங்கு நேரத்தில், மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய காவல்துறையினர், சட்டத்தைத் தங்கள் கையில் எடுத்துக்கொள்ள பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு அனுமதித்ததன் விளைவுதான் இந்தப் பெருங்கொடூரம்.
காவல்நிலையத்தில் மிருகத்தனமான கொடுமை
சாத்தான்குளம் காவல்நிலையத்தில் தந்தையையும் மகனையும் உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட காவல்துறையினர் சூழ்ந்துகொண்டு சரமாரியாகத் தாக்கியும், லத்தியை அவர்களின் பின்புறம் வழியே உடலுக்குள் திணித்துக் கொடுமைப்படுத்தியும், வேட்டி - சட்டையெல்லாம் ரத்தத்தில் நனையும் வகையில் சித்திரவதை செய்தும், நெஞ்சுப்பகுதியில் உள்ள முடிகளைப் பிய்த்தெறிந்து மிருகத்தனமாகக் கொடுமைப்படுத்தி உயிர் பறிக்கப்பட்டிருப்பதை பென்னிக்சின் தாயும் - சகோதரியும் வேதனையோடும் கண்ணீரோடும் சொல்வதைக் கண்டு தமிழகமே பதறுகிறது.
சட்ட நடவடிக்கைகளில் திமுக துணை நிற்கும்
இறந்த இருவரின் உடலில் காயங்கள் நிறைந்திருப்பதை மருத்துவக் குறிப்புகளிலும் உறுதி செய்துள்ள நிலையில், உடல் கூராய்வு அறிக்கையும் எதிர்பார்க்கப்படுகிறது. மனிதத்தன்மையற்ற இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட - துணைநின்ற அனைவருக்கும் கடுமையான தண்டனை கிடைக்கும் வகையில் நீதிக்கான போராட்டத்தை ஜனநாயக சக்திகள் அனைத்தும் வலிமையுடன் தொடர வேண்டியுள்ள நிலையில், சட்டரீதியான அனைத்து நடவடிக்கைகளுக்கும் தி.மு.கழகம் துணை நிற்கும் என்ற உறுதியினை அளிக்கிறேன்.
குடும்பத்துக்கு ஆறுதல்- நிதி உதவி
கணவன் - மகன் என அன்பான இரண்டு உயிர்களைப் பறிகொடுத்து, மூன்று பெண் பிள்ளைகளின் கண்ணீருக்குப் பதில் சொல்ல முடியாமல் வேதனைத் தீயில் வெந்துகொண்டிருக்கும் அம்மையார் செல்வராணி அவர்களுக்குக் கழகத்தின் சார்பில் ஆறுதலினைத் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்தம் குடும்பத்திற்கு, தி.மு.கழகத்தின் சார்பில் 25 இலட்ச ரூபாய் நிதியுதவி அளிக்கப்படுகிறது. இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.
நிதியை நேரில் வழங்கிய கனிமொழி
இதனிடையே திமுக அறிவித்த ரூ25 லட்சம் நிதி உதவியை லோக்சபா எம்.பி. கனிமொழி இன்று வர்த்தகர் ஜெயராஜ் குடும்பத்தினரிடம் நேரில் வழங்கினார். பின்னர் ஜெயராஜ் குடும்பத்தினர் மு.க.ஸ்டாலினுடன் தொலைபேசியில் உரையாடினர். மேலும் உங்கள் குடும்பத்துக்கு திமுக உறுதுணையாக இருக்கும் என்று கனிமொழியும் ஜெயராஜ் குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார்.