தொடர் தேர்தல் தோல்விகள் எதிரொலி- கொங்கு மண்டல திமுகவில் 'மராமத்து' பணிகளை தொடங்கிய ஸ்டாலின்!
சென்னை: கொங்கு மண்டலத்தில் திமுக தொடர் தோல்விகளை சந்தித்து வரும் நிலையில் அப்பகுதியில் தொண்டர்கள் எதிர்பார்ப்புப்படி களை எடுப்பு பணியை தொடங்கி விட்டார் அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்.
2016 சட்டசபை தேர்தலில் திமுக ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு முட்டுக்கட்டையாக இருந்தது கொங்குமண்டலத்தில் அதிமுக பெற்ற வெற்றிதான். அதேபோல் உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுகவின் கோட்டைதான் கொங்கு மண்டலம் என்பதை நிரூபித்தன தேர்தல் முடிவுகள்.
முதல்வர் பதவிக்கு முட்டுக்கட்டை...கொங்கு மண்டல திமுகவில் தூர்வரும் பணிகளை தொடங்கும் ஸ்டாலின்
கொங்கு மண்டலம் சவால்
இதேநிலை நீடித்தால் 2021 சட்டசபை தேர்தலில் திமுகவுக்கு மீண்டும் கொங்கு மண்டலம் பெரும் சவாலாக இருக்கும் என்கிற கருத்துகள் முன்வைக்கப்பட்டன. இதே கருத்தை சென்னையில் கடந்த மாதம் நடைபெற்ற திமுக செயற்குழுவில் பேசிய நிர்வாகிகள் பலரும் வலியுறுத்தினர். அப்போது கொங்கு மண்டல திமுக மூத்த நிர்வாகிகள் பலரும் திமுகவுடன் கை கோர்த்து கொண்டு செயல்படுவதையும் பலர் குமுறலாக வெளிப்படுத்தினர். அக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், யார் துரோகம் செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
சொன்னபடி களைஎடுப்பு
அதேநேரத்தில் ஒவ்வொரு தோல்விக்குப் பின்னரும் ஸ்டாலின் இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிடுவதும் பின்னர் அதுபற்றி கண்டுகொள்ளாமல் இருப்பதும் பொதுவான போக்காக இருக்கிறது. ஆகையால் இம்முறையும் அதுவும் சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் ஸ்டாலின் சாட்டையை சுழற்றுவாரா? இல்லையா என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. தற்போது செயற்குழுவில் உறுதியளித்தபடி கொங்குமண்டலத்தில் களை எடுப்பு பணிகளை ஸ்டாலின் தொடங்கிவிட்டார்.
சேலம் திமுகவில் மாற்றம்
சேலம் திமுகவில் எதிரும் புதிருமாக அரசியல் செய்த ஆ. ராஜா. சிவலிங்கம், செல்வகணபதி மூவருக்கும் புதிய பொறுப்புகளை கொடுத்திருக்கிறார் ஸ்டாலின். வீர்பாண்டி ஆ. ராஜா, திமுக தேர்தல் பணிக்குழு செயலராகவும் அவரிடம் இருந்த கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் பதவி என்.ஆர். சிவலிங்கத்துக்கும் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பதவி செல்வகணபதிக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
நாமக்கல் காந்திசெல்வன் நீக்கம்
இதேபோல் திமுகவினரின் கடுமையான குற்றச்சாட்டுகளுக்குள்ளான நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் காந்தி செல்வன் அப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். அவருக்குப் பதில் ராஜேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். காந்திசெல்வன் மீதான புகார்கள் குறித்து திமுக தலைமை விசாரணகளை தீவிரமாக நடத்தி அதன் அடிப்படையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
திமுக உட்கட்சி தேர்தல்
சேலம், நாமக்கல் மாவட்டங்களைத் தொடர்ந்து கொங்கு மண்டலத்தின் இதர பகுதிகளிலும் அடுத்த தூர்வாரும் பணிகளை ஸ்டாலின் மேற்கொள்ள கூடும் என தெரிகிறது. இந்நிலையில் திமுகவின் 15-வது பொதுத்தேர்தல் வரும் 21-ந் தேதி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிருப்திக்குள்ளானவர்கள் கையில் கட்சி நிர்வாகம் போகாமல் இருக்க வேண்டும் என்பதில் தலைமை கழகம் கவனமாக இருக்க வேண்டும் என விரும்புகின்றனர் அக்கட்சி தொண்டர்கள்.