"பாஜக வளருது திமுக பதறுது".. பாஜக பெண்கள் மீது பைக்கை விட்டு ஏத்திய திமுக நிர்வாகி.. சென்னை பரபரப்பு
சுவர் விளம்பரத்தினால், திமுக - பாஜகவினர் இடையே மோதல் ஏற்பட்டது
சென்னை: பாஜக மகளிரணி நிர்வாகிகள் மீது, திமுக வட்டசெயலாளர் பைக்கை மோதி அராஜகத்தில் ஈடுபட்டாராம்.. இதையடுத்து, தமிழக பாஜக தற்போது கண்டன போராட்டத்தை அறிவித்துள்ளது.. சென்னையில், சுவர் ஒன்றில் தேர்தல் விளம்பரம் செய்வதில் திமுக - பாஜகவினரிடையே ஏற்பட்ட மோதலால் ஏற்பட்ட பரபரப்பும், இதையொட்டி நடந்த மோதலும், படுகாயங்களும் அதிர்ச்சியை உண்டு பண்ணி வருகிறது.
தேர்தலுக்கு சில காலங்களே உள்ளன.. அதற்கான வியூகங்களையும், ஆலோசனைகளும் அனைத்து கட்சிகளும் தனித்தனியே மேற்கொண்டு வருகின்றன.. கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளும் மறைமுகமாகவே நடந்தும் வருகின்றன.
இந்நிலையில் சென்னையில் உள்ள நங்கநல்லூர் பகுதியில் சுவர் ஒன்றில் கட்சி விளம்பரம் செய்வதில் திமுகவினருக்கும், பாஜகவினருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. அந்த சுவர் தனியாருக்கு சொந்தமானது.
மேகதாது அணை: தமிழகத்துக்கு எந்த கெடுதலையும் செய்யமாட்டேன்... திமுக எம்.பிக்களிடம் மோடி உறுதி
பிரதமர் மோடி
பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு பாஜகவினர் அந்த சுவற்றில் விளம்பரம் செய்திருந்தனர். பிறந்தநாள் முடிந்ததும் சுவர் விளம்பரத்தை திமுகவினர் அழித்துவிட்டு, அதில் தங்கள் கட்சியின் விளம்பரம் எழுதினர்... இதை பார்த்த பாஜகவினர் அந்த விளம்பரத்தை அழிக்க முயன்றனர்... விஷயம் அறிந்து திமுகவினர் சுவர் பகுதியில் குவிந்துவிட்டனர்.. இதனால் இரு தரப்பினரும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
திமுக வட்ட செயலாளர்
அப்போது பைக்கில் வந்த திமுகவின் நடராஜன், அங்கிருந்த பாஜகவினர் மீது மோதியதாக சொல்லப்படுகிறது.. இதில் 2 பெண்கள் உட்பட 3 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.. அந்த பெண்கள் இருவரும் பாஜகவின் மகளிரணி நிர்வாகிகளாம்.. காயமடைந்த 3 பேரும் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.. சிகிச்சையும் தற்போது நடந்து வருகிறது.. இந்த ஆத்திரத்தில் பாஜகவினர் நடராஜனை தாக்கி உள்ளதாக தெரிகிறது.. அதற்குள் தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து நடராஜனை மீட்டு ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.
சுவர் விளம்பரம்
இரு தரப்பிலும் காயங்கள் அடைந்ததை அறிந்த பாஜகவினரும், திமுகவினரும் என நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் குவிந்துவிட்டனர்.. அந்த பகுதியே பதற்றமாக காணப்பட்டது.. எந்தவித அசம்பாவிதமும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால், போலீஸார் ஏராளமானோர் குவிக்கப்பட்டனர்... அதனால் பெரிய அளவில் வன்முறை நடக்கவில்லை என்றாலும், இரு தரப்புமே மாறி மாறி கோஷங்களை, எதிர்ப்புகளை எழுப்பி கொண்டே இருந்தனர்.
நடராஜன்
இருவரிடமும் போலீஸார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதில், திமுகவினர் கலைந்து சென்றனர். ஆனால், பாஜகவினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், 35 பேரை போலீசார் கைது செய்து விடுவித்து விட்டனர்.. இப்போது திமுக நடராஜனிடம் மட்டும் விசாரணை நடந்து வருகிறது.
பாஜக வளருது
இதனிடையே, பாஜக ஊடக பிரிவு ஒரு அறிக்கை வெளியிட்டது.. "பாஜக வளருது திமுக பதறுது" என்பதுபோல், பாஜகவின் வளர்ச்சியை கண்டு திமுகவினர் பதற தொடங்கிவிட்டனர் என்பதற்கு நங்கநல்லூர் தாக்குதல் ஒரு எடுத்துக்காட்டு சம்பவம். இதை கண்டித்து தமிழக பாஜக மாநில தலைவர் முருகன் அவர்களின் அறிவுறுத்தலின்படி, 22.09.2020 காலை 11 மணிக்கு சென்னையில் உள்ள மாவட்டங்களின் சார்பில் சென்னையில் 7 இடங்களில் திமுக அராஜக போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது" என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.