கூட்டணி பரபர... பாமகவுக்கு பாசவலை வீசுகிறதா திமுக... பிடிகொடுக்காத ராமதாஸ்
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் கூட்டணிக்கான முன்னெடுப்புகள் திமுக தரப்பில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பர்களும் இல்லை என்பதற்கேற்ப வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் மேலும் சில புதிய கட்சிகள் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
ஓபிசி இட ஒதுக்கீடு விவகாரத்தை பொறுத்தவரை திமுகவும், பாமகவும், ஒத்த கருத்துடைய கட்சிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை மெட்ரோ ரயில்...ஆதரித்தவர் கருணாநிதி...எதிர்த்தவர் ஜெயலலிதா...திமுக எம்.பி. கேள்வி!!
கூட்டணி கட்சிகள்
கொரோனா பரபரப்புக்கு மத்தியில் அரசியல் கட்சிகள் கூட்டணிக்கான திரைமறைவு வேலைகளை சத்தமின்றி தொடங்கிவிட்டன. சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், வரும் பொங்கல் பண்டிகைக்குள் கூட்டணியை இறுதி செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது திமுக தலைமை. இதனால் ஒரு சில கட்சிகளுக்கு திமுக சீனியர்கள் இப்போதே தங்கள் சோர்ஸ்கள் மூலம் தூதுவிடும் படலத்தை தொடங்கி பேச்சுவார்த்தை நடத்த முயற்சித்து வருகின்றனர்.
பாமக வலிமை
வட தமிழகத்தை பொறுத்தவரை பாட்டாளி மக்கள் கட்சிக்கு கிராமங்கள் வரை ஓரளவு வலிமையான கட்டமைப்புகள் உள்ளன. இதனால் தான் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற 21 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலின் போது பாமகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட், 7 தொகுதிகளில் போட்டியிட சீட் கொடுத்து அதிமுக தனது கூட்டணிக்கு அழைத்துச் சென்றது. அதிமுக கூட்டணியில் பாமக தொடர்ந்தாலும், 8 வழிச்சாலை திட்டம், டாஸ்மாக் கடை திறப்பு, உள்ளிட்ட விவகாரங்களில் கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன.
ஸ்டாலின் வாழ்த்து
இந்த சூழலில் அண்மையில் தனது 81-வது பிறந்தநாளை கொண்டாடிய பாமக நிறுவனர் ராமதாசுக்கு, ஸ்டாலின் தொலைபேசியில் அழைத்து நலம் விசாரித்து வாழ்த்து தெரிவித்திருந்தார். மேலும், ட்வீட்டரிலும் ராமதாஸை 'அய்யா' என்று பெருமைப்படுத்தியிருந்தார் ஸ்டாலின். இதன் அர்த்தம் அரசியல் தெரிந்த யாருக்கும் புரியாமல் இருக்காது. திமுக கூட்டணிக்கு வர வேண்டும் என்பதற்கான சமிஞ்கையாகவே அது கருதப்படுகிறது. இதனிடையே அமைச்சர்கள் தன்னை அழைத்து வாழ்த்துக் கூறியதை ட்வீட்டரில் பகிர்ந்த ராமதாஸ், ஸ்டாலின் வாழ்த்து கூறியதை பகிரவில்லை.
இட ஒதுக்கீடு
ஓபிசி இட ஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய பாஜக அரசு மீது பாமக கடும் அதிருப்தியில் இருந்து வருகிறது. இதன் வெளிப்பாடகவே ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் இந்த விவகாரத்தில் மத்திய அரசை விமர்சித்து சற்று கடுமையாகவே அறிக்கைகள் கூட வெளியிட்டு இருந்தார்கள். இதனிடையே அண்மையில் ராமதாஸிடம் தொலைபேசி மூலம் பேசிய திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி, சமூகநீதியை காக்க வேண்டிய நேரம் இது எனக் கூறி சூசகமாக தனது கருத்தை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.