குடிநீர் பிரச்சினை.. கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது திமுக
சென்னை: தமிழகத்தில் நிலவி வரும் தண்ணீர் பிரச்சினை குறித்து விவாதிக்க திமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளது.
தமிழக சட்டசபை கூட்டத் தொடர் கடந்த பிப்ரவரி 8-ந் தேதி தொடங்கியது. அன்று தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) நிதித்துறை அமைச்சரும் துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பிறகு, அரசுத் துறைகளின் மானியக் கோரிக்கைகள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். ஆனால் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றதால், மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறாமல் சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் தமிழக சட்டசபை கடந்த மாதம் 28-ஆம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும், சட்டசபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு, தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடியுள்ளது. மறைந்த முன்னாள் எம்எல்ஏ குமாரதாஸுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை குறித்த விவாதம் தொடங்கியது. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பதில் அளித்து வருகிறார்.
இந்த நிலையில் மற்ற விவாதங்களை ஒத்திவைத்துவிட்டு தண்ணீர் பிரச்சினை குறித்து மட்டும் விவாதிக்கக் கோரி திமுக கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தது.