பொன்முடி மீது கோபத்தை கக்கும் உடன்பிறப்புகள்... இடைத்தேர்தல் தோல்வி எதிரொலி
Recommended Video
சென்னை: விக்ரவாண்டி இடைத்தேர்தலில் திமுக அடைந்த தோல்விக்கு பொன்முடி பரிந்துரை செய்த வேட்பாளர் தான் காரணம் என உ.பி.க்கள் சமூக வலைதளங்களில் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
தலைமை எடுக்கும் முடிவுகள் மீது இனிமேலாவது மாவட்டச்செயலாளர்கள் தலையிடக் கூடாது என்ற கோரிக்கையும் திமுகவில் எழுந்துள்ளது.
மேலும், பொன்முடி பேச்சை கேட்காமல் மு.க.ஸ்டாலின் செயல்பட்டிருந்தால் விக்ரவாண்டியில் வெற்றி பெற்றிருக்கலாம், அல்லது வாக்கு வித்தியாசத்தையாவது குறைத்திருக்கலாம் என திமுகவில் ஆதங்க குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.
அதிமுக போட்ட அசத்தல் மாஸ்டர் பிளான்.. கோட்டை விட்ட திமுக.. இனி ஒவ்வொரு அடியும் ரொம்ப முக்கியம்
ஜீரணிக்கமுடியவில்லை
விக்ரவாண்டியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வனை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் புகழேந்தி 44,924 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளார். இதில் தோல்வியை ஒரு புறம் ஏற்றுக்கொண்டாலும், வாக்குகள் வித்தியாசத்தை தான் தங்களால் ஜீரணிக்கமுடியவில்லை என திமுக உ.பி.க்கள் தெரிவிக்கின்றனர்.
காவுவாங்கிவிட்டார்
விக்ரவாண்டி வன்னியர் சமுதாய கோட்டை எனத் தெரிந்தும் பொன்முடி தனது சுயநலத்துக்காக கட்சியை காவு வாங்கிவிட்டார் என அதிருப்தி குரல்கள் எழுந்துள்ளன. மறைந்த வன்னிய சமுதாய தனிப்பெரும் தலைவர் ஏ.கோவிந்தராஜு மகன் ஏ.ஜி.சம்பத்திற்கு சீட் வழங்கியிருந்தால் நிச்சயம் விக்ரவாண்டியை தக்க வைத்திருப்போம் அல்லது சில நூறு ஓட்டுக்கள் மட்டுமே வித்தியாசம் பெற்றிருப்போம் என்கிறார் வடமாவட்ட திமுக முக்கிய நிர்வாகி ஒருவர்.
பகை
ஏ.ஜி.சம்பத்துடன் தனக்கு இருக்கும் பகையை மனதில் வைத்து கொண்டு அவருக்கு சீட் தர வேண்டாம் என பொன்முடி தடை போட்டதாலேயே, வேறுவழியின்றி தொகுதிக்கே சம்பந்தமில்லாத புகழேந்திக்கு தலைமை சீட் கொடுத்ததாகவும் கூறினார் அவர். மேலும், ஏ.ஜி.சம்பத்திற்கு அவரது தந்தையின் முகத்துக்காகவே ஒரு இருபதாயிரம் வாக்குகள் கூடுதலாக விழுந்திருக்கும் எனத் தெரிவித்தார்.
பின்னடைவு
மேலும், தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தவர்களிடம் எ.வ.வேலு, பொன்முடி, கே.என். நேரு போன்றோர் கடுகடுவென முகத்தை வைத்துக்கொண்டு வேலை வாங்கினால் எந்த தொண்டன் வேலை செய்வான் என்றும், இன்னும் அந்தக்காலத்தை போல் அவர்கள் அரசியல் செய்தால் அது கட்சிக்கு தான் பின்னடைவு என்பதை புரிந்து வைத்துக்கொள்ள வேண்டும் என்கிறார் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த மத்திய மாவட்ட நிர்வாகி ஒருவர்.
மாவட்டச்செயலாளர்கள்
கட்சித் தலைமை எடுக்கும் முடிவுகளுக்கு மாவட்டச்செயலாளர்கள் கட்டுப்பட்டு நடந்து அதனை ஏற்கவேண்டுமே தவிர, மாவட்ட அரசியலுக்காக ஒட்டுமொத்த கட்சியையும் பகடைக்காயாக பயன்படுத்தக் கூடாது என்பது தொண்டர்களின் அடிமட்ட நிர்வாகிகளின் கோரிக்கையாக உள்ளது.