10 ரூபாய் பஜ்ஜிக்காக.. ஹோட்டல் ஊழியரை போட்டு வெளுத்த திமுகவினர்! வைரல் வீடியோ!
Recommended Video
சென்னை: சென்னை ஆர் கே நகர் தொகுதியில் ஒரு உணவகத்தில் பஜ்ஜி சாப்பிட்டு காசு கொடுக்காமல் சென்ற திமுகவினரை தட்டி கேட்ட ஊழியரை தாக்கிய வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.
சென்னை ஆர்.கே நகர் தொகுதி வைத்தியநாதன் மேம்பாலம் அருகில் அமுதா உணவகம் நடத்தி வருபவர் தங்கபாண்டியன். நேற்று மாலை 4 மணி அளவில் திமுகவை சேர்ந்த கரிமேடு ராஜி, சிலம்பரசன் யுவராஜி மற்றும் காய்கறி கடை முருகன் ஆகியோர் வடை பஜ்ஜி சாப்பிட்டு விட்டு காசு கொடுக்காமல் சென்றனர்.
கடையில் உள்ள தொழிலாளி காசு கேட்டவுடன் அவரை அவதூறாக பேசியுள்ளனர். இதையடுத்து அப்போது வாய்தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த நிர்வாகிகள் நாங்கள் யாரென்று காட்டுகிறோம் என்று கூறிவிட்டு சென்றனர்.
பின்னர் இரவு 10 மணிக்கு முன்னாள் திமுக வட்ட செயலாளரும் வழக்கறிஞருமான ரஜினி என்பவர் தலைமையில் 10 க்கும் மேற்பட்ட திமுகவினர் உணவகத்தில் புகுந்து கடை முதலாளியை தரக் குறைவாக பேசி உணவக ஊழியர் முருகன் என்பவரை சரமாரியாக அடித்து உதைத்தனர்.
இதையடுத்து ஊழியர் முருகன் இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதேபோல் திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் இருந்தபோது வளசரவாக்கத்தில் பிரியாணி கடையில் உணவு காலி என்று சொன்னதற்காக ஊழியரை திமுகவினர் கடுமையாக தாக்கியதை அடுத்து திமுகவின் யுவராஜ் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். அதுபோல் விழுப்புரத்தில் பெட்ரோல் போட்ட திமுக நிர்வாகி கவி மோசஸிடம் காசு கேட்டதற்கு ஊழியரை கடுமையாக தாக்கினார். இதுபோல் திமுக நிர்வாகிகள் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருவது திமுக தலைமைக்கு பெரும் தலைவலியை கொடுத்துள்ளது.