திமுகவில் முதல் முறையாக பொறுப்பு பெற்ற உதயநிதி.. களை கட்டிய அண்ணா அறிவாலயம்
Recommended Video
சென்னை: திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில் அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திமுகவின் அதிகாரமிக்க பொறுப்புகளில் ஒன்று திமுக இளைஞரணி செயலாளர் பதவியாகும். இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலினுக்கு ஏதேனும் பொறுப்பு வழங்க வேண்டும் என நிர்வாகிகள் கேட்டுக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் அவருக்கு 30 ஆண்டுகளாக அவரது தந்தை வகித்து வந்த இளைஞரணி செயலாளர் பதவி வழங்கப்படும் என எதிர்பார்ப்பு எழுந்தது. இதையடுத்து இன்றைய தினம் திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிக்கை வெளியிட்டார்.
அதில் திமுக இளைஞர் அணிச் செயலாளராக பணியாற்றி வரும் வெள்ளக்கோவில் சாமிநாதன் அப்பொறுப்பிலிருந்து விடுவித்து, அவருக்கு பதிலாக கழக சட்டத்திட்ட விதி 18, 19 பிரிவுகளின்படி, இளைஞர் அணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் தலைமை கழகத்தால் நியமிக்கப்படுகிறார் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பை திமுக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். உதயநிதிக்கு புதிய பதவி கொடுக்கப்படும் என அறிந்த தொண்டர்கள் அண்ணா அறிவாலயத்துக்கு வந்தனர். அவர்கள் எதிர்பார்த்தபடியே பொறுப்பு வழங்கப்பட்டதை அடுத்து பட்டாசு வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர்.
ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டாலினின் இல்லத்தில் அவரையும் தாய் துர்காவையும் சந்தித்து ஆசி பெற்றார் உதயநிதி. தொடர்ந்து அவருக்கு கட்சியின் மூத்த தலைவர்களும் நிர்வாகிகளும் வாழ்த்து தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து மனைவி கிருத்திகாவுடன் அண்ணா அறிவாலயத்துக்கு செல்கிறார் உதயநிதி.