"சாப்ட்"வேர் ஆக மாறிய திமுக எம்எல்ஏக்கள்.. "ஹாட்" பிரச்சினைகளிலும் "கூல் கூல்" போக்கு!
சென்னை: குடிநீர் பிரச்சனை உள்ளிட்ட மக்களின் வாழ்வாதர பிரச்சனைகளில் அதிமுக அரசை வெளுத்து வாங்காமல் திமுக சட்டசபையில் மிகவும் "சாப்ட்" ஆக நடந்து கொள்வது அக்கட்சியினரை ஆச்சரியப்படுத்தி வருகிறதாம்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக அரசை திமுக கவிழ்த்துவிடும் என கூறப்பட்டது. ஆனால் திமுக தலைவரான மு.க.ஸ்டாலினோ கொல்லைப்புற வழியாக ஒருபோதும் ஆட்சியை கைப்பற்றமாட்டோம் என கூறிவந்தார்.
அண்மையில் நடைபெற்ற சட்டசபை இடைத்தேர்தல்களின் போதும் அதிமுக அரசு வீட்டுக்கு அனுப்பப்படும் என கூறினார் ஸ்டாலின். ஆனாலும் அதிமுக அரசுக்கு எதிராக எந்த ஒருநடவடிக்கையுமே திமுக மேற்கொள்ளவில்லை.
மேலும் 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து மும்பை செல்கிறார்கள்.. அதிருப்தி காங். எம்எல்ஏ பரபரப்பு பேட்டி
சபாநாயகருக்கு எதிரான தீர்மானம்
அதேபோல் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதையும் திடீரென திமுக வாபஸ் பெற்றது. இதனால் அதிமுக அரசுக்கு எதிராக திமுக தீவிரம் காட்டவில்லையோ என்ற பேச்சுக்கள் கிளம்பின.
பல்டி அடிக்கும் எம்.எல்.ஏ.க்கள்?
திமுக எம்.எல்.ஏக்கள் பலரும் அதிமுக அரசால் ஆதாயம் அடைந்து வருவதால் சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்தின் மீது அக்கட்சி எம்.எல்.ஏக்களே எதிராக வாக்களிக்கலாம் எனவும் கூறப்பட்டது. தற்போது சட்டசபையில் அதிமுக அரசை வெளுத்து வாங்குவதற்கு பதிலாக பாராட்டு பத்திரம் வாசித்து கொண்டிருக்கிறது திமுக.
திமுக மென்மை போக்கு
தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் குறித்து எதுவும் பேசாமல் அடக்கி வாசிக்கிறது திமுக. நாங்களும் சட்டசபைக்கு போனோம் என்கிற கதையாக திமுகவின் நடவடிக்கைகள் இருக்கின்றனவாம். திமுகவின் இந்த மென்மை போக்கு அதிரடியை எதிர்பார்த்து காத்திருந்த அக்கட்சி தொண்டர்களையே அதிருப்திக்குள்ளாக்கியிருக்கிறது.
திமுக தொண்டர்கள் அதிருப்தி
ஏற்கனவே அதிமுகவில் இருந்து வருபவர்களுக்கு திமுகவில் அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது என்கிற புகைச்சல் இருந்து வருகிறது. தற்போது அதிமுகவுடன் கட்சி மேலிடத் தலைவர்களே சமரசமாக நடந்து கொள்வது போன்ற போக்கைக் கடைப்பிடித்து வருவது இந்த அதிருப்தியை அதிகப்படுத்தியிருக்கிறது என்கின்றன திமுக வட்டாரங்கள்.