உடனே உதயநிதிக்கு பதவி கொடுங்க.. திமுக தலைமைக்கு சரமாரியாக பாயும் கடிதங்கள்..!
சென்னை: திமுகவின் இளைஞர் அணிக்கு உதயநிதியை செயலர் ஆக்குங்கள் என்று கேட்டு பல மாவட்டங்களில் இருந்து தலைமைக்கு திமுகவினர் கடிதம் எழுதி வருகின்றனராம்.
திமுகவின் இளைஞர் அணித் தலைவராக நீண்ட காலமாக ஸ்டாலின் பொறுப்பு வகித்து வந்தார். ஸ்டாலினின் தலைமை என்பதால் அந்த அணி வெகு வேகமாக செயல்பட்டு வந்தது. அதன் பின்னர் கருணாநிதியின் மறைவுக்குப் பின்னர் ஸ்டாலின் திமுக தலைமைப் பொறுப்புக்கு வந்தார்.
அதன் பின்னர் இளைஞரணியின் தலைமைப் பொறுப்பு முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோயில் சாமிநாதனுக்கு வழங்கப்பட்டது. அப்போதே வெள்ளக்கோயில் சாமிநாதன் இதற்கு சரிப்பட்டு வரமாட்டாரே என்று பல விமர்சனங்கள் எழுந்தன. திமுக சீனியர்களும் தொடர்ந்து விமர்சித்து வந்தனர்.
எக்ஸிட் போலை நம்பாதீர்கள்.. உலக நிறுவனங்களுக்கு எச்சரிக்கை.. அதிர வைக்கும் ஃபார்ச்யூன் 500 கடிதம்!
ஒத்துப் போகவில்லை
வெள்ளக்கோயில் சாமிநாதன் இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டபோது அவருக்கு கீழே துணை செயலாளர்களாக அன்பில் மகேஷ், தாயகம் கவி, அசன் முகமது ஜின்னா, ஜோயல், பாரி ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கும் சாமிநாதனுக்கும் பல நேரங்களில் பொருந்தி போவதில்லை. சாமிநாதனும் இவர்களை கண்டு கொள்வதில்லை.
கோஷ்டிப் பூசல்
ஒரு அணியின் தலைவராக தனக்கு கீழே இருப்பவர்களுக்கான முக்கியத்துவத்தை சாமிநாதன் இவர்களுக்கு வழங்குவது இல்லை என்று இளைஞர் அணியினர் கூறுகிறார்கள். அதே வேளையில் துணை செயலாளர்களும் மாநில செயலாளரை எதிலும் கலந்து கொள்வதில்லை என்றும் கூறுகிறார்கள்.
திருப்பூர் கூட்டம்
சாமிநாதனின் சொந்த மாவட்டம் திருப்பூர். இங்கு அன்பில் மகேஷை அழைத்து வந்து கூட்டம் நடத்தியுள்ளனர். இது குறித்து சாமிநாதனுக்கு தெரியப் படுத்தப்படவில்லை என்று கூறுகிறார்கள் உடன்பிறப்புகள். இதனால் சாமிநாதனை இளைஞர் அணி செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று தி.மு.கழகத்தில் கலகக் குரல்கள் கேட்க துவங்கி விட்டன.
உதயநிதி வந்தாகணுமாம்
அதோடு சாமிநாதனை தூக்கிவிட்டு அவருக்கு பதிலாக ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினை இளைஞர் அணிக்கு செயலாளர் ஆக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் உடன்பிறப்புகள் உதயநிதிக்கு இளைஞர் அணி செயலாளர் பொறுப்பு கொடுங்கள் என்று கேட்டு கடிதம் அனுப்பி வருகிறார்கள்.
பொறுங்கப்பா பொறுங்க
தேர்தல் களேபரங்கள் முடிந்ததும் கட்சிக்குள் சில சீரமைப்பு பணிகள் நடைபெறும் என்று கூறப்படுகிறது. அதில் சாமிநாதன் வீட்டுக்கு அனுப்பப் படுவாரா என்பது தெரியவரும் என்று உடன்பிறப்புகள் கூறுகிறார்கள்