"மாஸ்டரை" கையில் பிடித்த எடப்பாடியார்.. "பொள்ளாச்சி"யை கையில் எடுத்த ஸ்டாலின்.. அதிரடி சிக்கல்!
எடப்பாடியாருக்கு எதிரான பிரச்சாரத்தில் வேகம் எடுத்து வருகிறது திமுக
சென்னை: விஸ்வரூபம் எடுத்து கொண்டிருக்கிறது திமுக.. விழி பிதுங்கி கொண்டிருக்கிறது அதிமுக.. நடந்து வரும் பிரச்சார நிகழ்வுகளை எல்லாம் பார்த்தால் அப்படித்தான் தென்படுகிறது!
Recommended Video
விரைவில் தேர்தல் வரவுள்ளதால், திமுக, அதிமுக கூட்டணிகள் பிஸியாகி உள்ளன.. வழக்கம்போலவே இந்த முறையும் இந்த இரு பிரம்மாண்டங்களும் நேர் எதிர் களத்தை சந்திக்க உள்ளன. ஆட்சியை தக்க வைத்து கொள்ளும் நோக்கில் எடப்பாடியாரும், ஆட்சியை பிடிக்கும் நோக்கில் ஸ்டாலினும் மும்முரமாகி வருகின்றனர்.
எடப்பாடியாரை பொறுத்தவரை அவருக்கு சிக்கல் கட்சிக்குள்ளும் இருக்கிறது, கூட்டணியிலும் இருக்கிறது வெளியிலும் இருக்கிறது.. உட்கட்சி பூசல், பாஜகவின் நெருக்கடி, எதிர்க்கட்சிகளின் திமுகவின் அசுர வளர்ச்சி என அனைத்துக்கும் வேகம் தரும் நிலையில் உள்ளார்.. இந்த எடப்பாடி அரசுக்கு சாதகமாக இருப்பது 2500 ரூபாய் பொங்கல் பரிசும், கொரோனா கால செயல்பாடுகளும்தான்!
சாதனைகள்
வழக்கமாக செய்த சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்பது என்பது ஆளும் தரப்பு செய்யக்கூடிய நிகழ்வுதான்.. அந்த வகையில் சாதகமான விஷயங்கள் எடப்பாடி பழனிசாமிக்கு உள்ளன.. ஆனால், அதைவிட சர்ச்சைகள் அதிகம் வந்து இந்த கடைசி நேரத்தில் சேர்ந்துவிட்டன என்பதையும் மறுக்க முடியாது. அதில் ஒன்று விஜய் விவகாரம், மற்றொன்று பொள்ளாச்சி பாலியல் விவகாரம்!
மாஸ்டர் படம்
தியேட்டர்களில் 100 சதவீத சீட்டுகளை விஜய் வாய் விட்டு கேட்டுவிட்டார் என்ற ஒன்றிற்காகவே எடப்பாடியார் அவரது கோரிக்கைக்கு செவி சாய்த்துள்ளார்.. மற்றபடி இந்த அறிவிப்பானது பொதுமக்களின் எதிர்ப்பை நிறையவே சம்பாதித்து வருகிறது.. இந்த எதிர்ப்பு எடப்பாடியாருக்கும், விஜய்க்கும் சரிசமமாகவே செல்கிறது.. இவ்வளவு நாள் கட்டிக்காத்த நற்பெயர்களை இவர்கள் 2 பேருமே குறைத்து கொண்டும் வருகிறார்கள்.
ரசிகர்கள்
தன்னுடைய மாநில மக்களின் மீது எடப்பாடியாருக்கும், தன்னுடைய உயிரினும் மேலான ரசிகர்கள் மீது விஜய்க்கும்தான் முழு முதற் அக்கறை இருந்திருக்க வேண்டும்.. அரும்பாடு பட்டு, தொற்றை குறைத்து கொண்டு வரும் இந்த வேளையில், அதற்கு எதிர்எதிரான காரியங்களை செய்துள்ளதை இன்னும் யாராலும் ஜீரணிக்க முடியவில்லை.. இந்த விஷயத்தில் இன்னும் ஓபனாக சொல்லப்போனால், விஜய்க்காக எடப்பாடியார் இறங்கி வந்து ரிஸ்க் எடுத்திருக்கிறார்.
பொள்ளாச்சி
அதேபோல, பாலியல் பலாத்கார வழக்கில் அதிமுக பிரமுகர்கள் சிக்கியது எதிர்பாராத ஷாக்தான்.. இது திமுகவுகே லட்டு மாதிரி காரணம் கையில் வந்து விழுந்துள்ளது.. இது ஒன்று போதும்.. இந்த தேர்தல் முடியும்வரை அதிமுக தரப்பை தெருத்தெருவாக விமர்சித்து விடுவார்கள்..
நீக்கம்
என்னதான் சம்பந்தப்பட்டவர்களை கட்சியில் இருந்து தூக்கிவிட்டாலும், அவ்வளவு சீக்கிரம் விவகாரம் அணைந்து விடாது என்கிறார்கள்.. காரணம், இப்படி ஒரு கைது நடவடிக்கையின் பின்னணியில் பாஜகவும் இருக்கலாம் என்று கிசுகிசுக்கப்படுகிறது.. சொந்த கூட்டணி கட்சி விவகாரத்தை பேசி தீர்த்து கொள்ளாமல், இப்படி தாறுமாறான நடவடிக்கைகளில் இறங்குவது திமுகவுக்கே பலம் சேர்த்து வருகிறது
பிரச்சாரம்
ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி என எல்லாருமே இன்று பொள்ளாச்சி விஷயத்தை கையில் எடுத்துவிட்டனர்.. இந்த பிரச்சனையில் இருந்து எடப்பாடியார் எப்படி அதிமுகவை நற்பெயருடன் காப்பாற்றுவார் என்ற எதிர்பார்ப்பும் சேர்ந்தே எழுகிறது.. ஏற்கனவே கிராம சபை கூட்டங்கள் ஸ்டாலினுக்கு பலம் சேர்த்து வரும் நிலையில், ஆட்சிக்கு வந்தால் கல்வி கடன் ரத்து போன்ற அறிவிப்புகள் மக்களை ஈர்த்து வரும் நிலையில், ஆளும் தரப்புக்கு சிக்கல் மேல் சிக்கல் கூடி கொண்டே வருகிறது!