2 எம்எல்ஏக்களை இழந்த துக்கத்தில் திமுக.. எம்.பி.க்கள் கூட்டம் ரத்து.. ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை: அடுத்தடுத்து, திமுகவை சேர்ந்த 2 எம்எல்ஏக்கள் உயிரிழந்த நிலையில், நாளை நடைபெறவிருந்த, அக்கட்சி எம்பிக்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பிப்ரவரி 27ந் தேதியான நேற்று திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏவுமான கே.பி.பி.சாமி உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். இந்த நிலையில் இன்று மற்றொரு திமுக எம்எல்ஏவான காத்தவராயன் உடல்நலக்குறைவினால் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவங்கள் திமுகவினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தடுத்து இரண்டு எம்எல்ஏக்கள் உயிரிழந்துள்ளதால் தற்பொழுது சட்டசபையில் திமுக எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 98 ஆக குறைந்துள்ளது.
பிறந்த நாள் வாழ்த்து.. திமுக நிர்வாகிகளுக்கு முக ஸ்டாலின் முக்கிய வேண்டுகோள்
இதுபோன்ற ஒரு சூழ்நிலையில், நாளை திட்டமிட்டபடி அண்ணா அறிவாலயத்தில், திமுக எம்பிக்கள் ஆலோசனைக் கூட்டத்தை நடத்துவது சரியாக இருக்காது என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் கருதினார். எனவே நாளை நடைபெறவிருந்த கூட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார். பின்னொரு நாளில், ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என கூறப்படுகிறது.