கொரோனா பாதிப்பை முழுதாக வெளியிட திமுக வழக்கு - பதில்தர அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு
கொரோனா குறித்த செய்தி குறிப்பை தினசரி அடிப்படையில் மாவட்ட வாரியாக வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செ
சென்னை: கொரோனாவை குணப்படுத்துவதற்கான மருந்தோ, தடுப்பதற்கான தடுப்பூசியோ கண்டுபிடிக்கப்படாத நிலையில் கொரோனாவின் தாக்கத்தை முழுமையாக அரசு வெளியிட்டால்தான் மக்கள் விழிப்புணர்ச்சி அடைவார்கள் என்று திமுக எம்எல்ஏ பழனிவேல் தியாகராஜன் பொது நல மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் 3 வாரத்திற்குள் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவர் மனுவில், ஜூலை 5 முதல் 12 வரையிலான முழு ஊரடங்கு உத்தரவோ, அல்லது அரசின் பிற நடவடிக்கைகளோ கொரோனாவை கட்டுப்படுத்துவதில் சாதகமான முடிவை ஏற்படுத்தவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார். தொற்று உறுதிபடுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை மதுரையில் அதிகரிப்பது அச்சத்தை ஏற்படுத்துவதாகவும், பிற மாவட்டங்களுக்கு பரவும் என்ற கவலையை அளிப்பதாகவும் மனுவில் வேதனை தெரிவித்துள்ளார். ஆனால் கொரோனா தொற்று குறித்த முழுமையான தகவலை மக்களும், நிபுணர்களும் தெரிந்துகொள்ளாமல் தமிழக அரசு நிறுத்திவைத்திருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
குறைபாடுடைய மற்றும் மறைக்கப்பட்ட தகவல்களால் கொரோனா நோய் குறித்து பெருத்த சந்தேகத்தை கிளப்பும் வகையில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மாநிலத்தில் ஒரு பகுதியில் மட்டுமே தாக்கம் என்று இல்லாமல் உலக நாடுகள் அனைத்திலும் கொரோனா பரவியுள்ள நிலையில்,
தமிழகத்தில் ஒரு பகுதியில் முழு ஊரடங்கையும், மற்றொரு பகுதியில் எளிதான விதிமுறைகளுடனும் அமல்படுத்துவதால் மக்கள் கூட்டம் கூட்டமாக எல்லை தாண்டி செல்வதும், சரக்குகளை பதுக்குவதும், கொரோனா பரப்புவதற்கும் காரணமாகிவிடுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
கொரோனாவின் தாக்கம் மத்தியில் இருக்கக்கூடிய இப்போதே, தமிழகத்தில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதால், கொரோனாவின் தாக்கத்தை எளிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது எனவும் மனுவில் தெரிவித்துள்ளார். கொரோனாவை குணப்படுத்துவதற்கான மருந்தோ, தடுப்பதற்கான தடுப்பூசியோ கண்டுபிடிக்கப்படாத நிலையில் கொரோனாவின் தாக்கத்தை முழுமையாக அரசு வெளியிட்டால்தான், தனிமப்படுத்தி கொள்வது, சமூக இடைவெளி மற்றும் பாதுகாப்பு அம்சங்களை கடைபிடிப்பது குறித்து மக்கள் விழிப்புணர்ச்சி அடைவார்கள் என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார்.
கொரோனா லாக்டவுன் காலத்தில் வீட்டு வாடகை வசூலிக்க தடை கோரிய வழக்கு - ஹைகோர்ட் தள்ளுபடி
தனது தொகுதி மக்களிடமிருந்து வரும் புகார்களில், மருத்துவமனைகளில் பணியில் உள்ளவர்களின் எண்ணிக்கை, படுக்கைகளின் எண்ணிக்கை, அனுமதிக்கப்பட்ட மற்றும் குணமடைந்தவர்களின் தகவல் ஏதும் இல்லை கூறுவதாக குறிப்பிட்டுள்ளார். இணையதளத்தில் உள்ள விவரங்களும் தனியார் மருத்துவமனை குறித்த தகவல் மட்டுமே இடம்பெறுவதாகவும் மக்கள் புகார்களில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
மதுரையில் கொரோனாவின் எண்ணிக்கையை ஜூன், ஜூலை மாதங்களில் ஒப்பிட்டு பார்க்கும்போது, கடந்த முன்று மாதங்களாக தமிழக அரசு ஆக்கபூர்வமாகவோ பயனுள்ள வகையிலோ செயல்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார். கொரோனா குறித்து மாநில அளவிலான அறிக்கையை தினமும் தமிழக அரசு வெளியிட்டாலும், மாவட்ட வாரியாக செய்யப்பட்ட பரிசோதனைகளை வெளிப்படுத்த அரசு தவறுவதாகவும், அதனால் பாதிப்புகளை ஆயாந்து அறிந்து கொள்ள சிரமமாக இருப்பதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மாவட்ட வாரியாக மேற்கொண்ட சோதனை விவரங்கள், படுக்கைகள்.உள்ள மருத்துவமனைகள், மாதிர்கள் சேகரிக்கும் மையங்கள் ஆகியவற்றை வெளிப்படையாக அறிவிக்க கோரிக்கை வைத்துள்ளார். மேலும் அனைத்து மாவட்டங்களிலும் மாதிரிகள் சேமிப்பு மையங்களையும், பரிசோதனை கூடங்களையும் உருவாக்கவும் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த மனு இன்று நீதிபதிகள் எம்எம் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது இந்த மனு தொடர்பாக 3 வார காலத்திற்குள் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.