அடுத்த அஸ்திரத்தை எடுத்த திமுக.. அடிமட்ட அளவில் வேட்பாளர்களுக்கு தேடுதல் வேட்டை.. கிலியில் "அவர்கள்"
சென்னை: திமுகவில் கமுக்கமாகவும், அதே சமயமத்தில் அதிரடியாகவும் ஒரு வேலை நடக்கிறதாம்.. யாரெல்லாம் ஃபேமஸ் ஆட்களோ அவர்களை அடையாளம் கண்டு அனுப்பி வைக்குமாறு மாவட்ட செயலாளர்களுக்கு கட்சி தலைமை அறிவித்துள்ளது.. இந்த அறிவிப்பு ஒருசில நிர்வாகிகள் வயிற்றில் புளியை கரைத்து விட்டதுபோல உள்ளதாம்!
கொரோனா ஒரு பக்கம் கிடந்தாலும், அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு தமிழக கட்சிகள் தீவிரமாகி வருகின்றன.. அதிமுக ஒரு பக்கம் வியூகங்களை கையில் எடுத்துள்ளது. அதன்படி ஐடி விங் பலப்படுத்துதல், மாவட்டங்கள் பிரிப்பது தொடர்பான ஆலோசனை என பரபரத்து காணப்படுகிறது.
பாஜகவோ, நமீதா உள்ளே கொண்டு வந்து இறக்கிகி கெத்து காட்டி வருகிறது.. இன்னும் சிலருக்கு தூண்டில் போட்டு வருகிறது. அந்த வகையில், திமுக வேற ரூட்டை பிடித்துள்ளது.. பிரபலங்களை உள்ளே கொண்டு வருவதைவிட, கட்சிக்குள்ளேயே இருக்கும் பிரபலங்கள் மீது பார்வை விழுந்துள்ளது.
திமுகவில் வார்டு, கிராம அளவில் பிரபலமாக இருக்க கூடியவர்களை அடையாளம் கண்டு அனுப்புமாறு, அக்கட்சி தலைமை ஒரு சுற்றறிக்கையே அனுப்பி வைத்துள்ளதாம். உள்ளூரில் பிரபலமாக இருக்கும் கட்சி உறுப்பினர்களின் விவரங்களை அனுப்பி வைக்க வேண்டுமாம்.. இந்த சுற்றறிக்கை மாவட்ட செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தேர்ந்தெடுத்து அனுப்பப்படும் அந்த நபர் குறைந்தது 20 பேரிடமாவது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பிரமுகராக இருக்க வேண்டும் என்பது உட்பட பல விதிமுறைகள் அந்த அறிக்கையில் உள்ளதாகவும் சொல்கிறார்கள். இந்த தகவல் உண்மையா, பொய்யா என தெரியவில்லை.. ஆனால், உண்மையாக இருப்பின், அது நல்ல விஷயமே.. கட்சியின் வளர்ச்சி, செயல்பாடுகளுக்காக திமுக தலைமை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதை மனசார பாராட்டலாம். இதன்மூலம் கட்சிக்காக இவ்வளவு காலம் பாடுபட்டு கொண்டிருக்கும் செல்வாக்கு மிக்க தொண்டருக்கு நல்ல வாய்ப்பாகவும் இது அமையும்.
அதேசமயம், நிர்வாகிகளுக்கு வயிற்றில் புளியை கரைத்து வருகிறதாம்.. திடீரென ஏன் தலைமை பிரபலமானவர்களை தேடுகிறார்கள்? நம்மை ஓரங்கட்டி விடுவார்களோ? என்று கிலியும் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் இன்னொரு சங்கடமும் இவர்களுக்கு இருப்பதாக தெரிகிறது. ஊருக்குள் இருக்கும் பிரபலத்தை அடையாளம் காட்டிவிட்டால், தன் வாரிசை நாளைக்கு எப்படி அரசியலுக்கு கொண்டு வர முடியும் என்ற யோசனையும், கவலையும் இவர்களுக்கு எழுந்துள்ளதாம். இதெல்லாம் வெறும் அனுமானமா? உண்மையா என்பது தெரியவில்லை.
ஆனால், தினம் ஆலோசனை, மீட்டிங், விசாரிப்பு, என கட்சியின் வார்டு, கிராம நிர்வாகிகளுடன் ஸ்டாலின் பேசி வருவதே புது திருப்பமாக பார்க்கப்படுகிறது.. அதிலும் ஸ்டாலின் போட்டுள்ள அந்த புது கெட்-அப் அவருக்கு நிறையவே கை கொடுக்கிறது.. தற்போது, பிரபலங்களை தேடி திமுக விடுத்த இந்த அறிவிப்பும் உண்மையானால், தேர்தலில் வாக்கு வங்கியை பலப்படுத்தும் முக்கிய அம்சமாகவே பார்க்கப்படுகிறது. இருந்தாலும் இந்த அஸ்திரத்தையும் வீச காரணம் "அவர்"தானோ? அவர் தந்த வியூகத்தால்தான் இதுவும் நடக்கிறதோ என்று சில மா.செ.க்களும், நிர்வாகிகளும் உள்ளுக்குள் பொருமி வருகிறார்களாம்.
என்னங்க சொல்றீங்க.. ராதாரவி கடுப்பாய்ட்டாரா.. திரும்பவும் திமுகவில் சேர போகிறாரா?!