மார்கழி மழை.. வேடிக்கை பார்க்கும் அரசு.. வெந்த புண்ணில் வேலை பாய்ச்சும் முதல்வர் - ஸ்டாலின் தாக்கு
சென்னை: 'மார்கழி மழையால்' பாதிக்கப்பட்டுள்ள அனைத்து விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் உடனடியாக நிவாரணத் தொகையை அறிவிக்க வேண்டும் என்றும் பயிர்க் காப்பீட்டுத் தொகையும் தாமதமுமின்றி கிடைப்பதற்கு முதலமைச்சர் பழனிசாமி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக விவசாய நிலங்களிலும் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் பல்வேறு மாவட்டங்களிலும் உள்ள விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரி நிவாரண தொகை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர், "தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள், தொடர்ச்சியாகப் பெய்த மார்கழி மழையில், அடியோடு மூழ்கி - பொங்கல் விழா நேரத்தில் விவசாயிகள் அனைவரும் பெருந்துயருக்கும், பேரிழப்பிற்கும் உள்ளாகியிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.
மார்கழி மழை
நிவர் புயலில் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து இன்னும் மீள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு, இந்த "மார்கழி மழை" பேரிடியாகவே வந்திருப்பதை, ஏனோ இன்னும் அ.தி.மு.க. அரசு உரிய முறையில் அணுகுவதாகத் தெரியவில்லை. வடி வாய்க்கால்களைத் தூர்வாரும் பணியில் கோட்டை விட்ட அ.தி.மு.க. அரசு, விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதிலும் கோட்டை விட்டு - குறட்டை விட்டுத் தூங்குகிறது. நிவர் புயல் பாதிப்பிற்கு மாநில அரசு அறிவித்த நிவாரணமே இன்னும் முழுமையாக தங்கள் கைகளுக்கு வந்து சேரவில்லை எனப் பாதிக்கப்பட்ட விவசாயிகள் குமுறுகிறார்கள், கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அ.தி.மு.க. அரசு வேடிக்கை பார்க்கிறது
இப்போது பெய்துள்ள கனமழையால் தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களுக்கு மேல் கடுமையான பாதிப்பிற்குள்ளாகியிருக்கின்றன.அரசின் நிவாரணம் ஏதும் இதுவரை கிடைக்காமல் விவசாயிகள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். வேளாண் நிலங்களில் கடல் போல் நிரம்பியிருக்கும் தண்ணீரையும், அதில் மூழ்கிக் கிடக்கும் அறுவடை செய்ய வேண்டிய நெற்பயிர்களையும் பார்த்து விவசாயிகள் கண்கலங்கிப் புலம்பி நிற்பதை அ.தி.மு.க. அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது கண்டனத்திற்குரியது.
ஸ்டாலின் கேள்வி
ஏற்கனவே நிவர் புயலுக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்ட 600 கோடி ரூபாய் நிவாரணத் தொகை என்ன ஆனது? எத்தனை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்குப் போய்ச் சேர்ந்தது? மத்திய பா.ஜ.க. அரசிடம் கோரிய 3758 கோடி ரூபாய் நிதி என்ன ஆனது? என்பது எல்லாம் மர்மமாக இருக்கும் நிலையில் - இப்போது ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பு விவசாயிகளின் வாழ்வில் தாங்க முடியாத துயரத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் முதல்வர்
இந்தச் சூழலில், நாசமாகியுள்ள நெற்பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்காமல், "இனிமேல்தான் கணக்கு எடுக்கப் போகிறோம்" என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்திருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போலிருக்கிறது. ஆகவே, "மார்கழி மழையால்" பாதிக்கப்பட்டுள்ள அனைத்து விவசாயிகளுக்கும், பொது மக்களுக்கும் உடனடியாக நிவாரணத் தொகையை அறிவிக்க வேண்டும் என்றும் பயிர்க் காப்பீட்டுத் தொகையும் எவ்வித தாமதமுமின்றி கிடைப்பதற்கு முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் அதில் கூறியுள்ளார்.