விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை மூளுமானால்.. ஸ்டாலின் எச்சரிக்கை
சென்னை : டில்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டம் கலவரமாக வெடித்துள்ளது குறித்து திமுக தலைவர் மு.ஸ்டாலின் பேஸ்புக் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
மத்திய அரசின் வேளாண் திட்டங்களை எதிர்த்தும், அவற்றை திரும்பப் பெற வலியுறுத்தியும் விவசாயிகள் டில்லியில் போராட்டம் நடத்தி வந்தனர். போராட்டத்தை தீவிரப்படுத்திய விவசாயிகள், இன்று டிராக்டர் பேரணி நடத்தினர். அப்போது போலீசாருடன் ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது.
கலவரத்தை கட்டுப்படுத்தி, அமைதி திரும்ப செய்வதற்காக மத்திய உள்துறை அமைச்சகம், டில்லி போலீசார் தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. விவசாய சங்கங்களும் விவசாயிகளை திரும்பி வரும்படி அழைப்பு விடுத்துள்ளன.
ஒன்றும் செய்யாத மத்திய அரசு :
இந்நிலையில் கலவரம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் பேஸ்புக்கில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில்,
இரண்டு மாதங்களுக்கும் மேலாக அமைதி வழியில் போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளின் உணர்வுகளுக்கும் கோரிக்கைக்கும் மதிப்பளிக்காமல் உதாசீனம் செய்து வருகிறது மத்திய பா.ஜ.க. அரசு. பேச்சுவார்த்தை என்ற பெயரால் நாள் கடத்தும் நாடகங்களைத் தான் பா.ஜ.க. அரசு நடத்தியதே தவிர ஆக்கபூர்வமான செயலைச் செய்யவில்லை.
விவசாயிகள் எதிரிகளா :
இந்திய நாட்டின் 30 கோடிக்கும் அதிகமான விவசாயிகளை எதிரிகளாக நினைக்கிறது மத்திய அரசு. பிரதமர், விவசாயிகளின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி ஏன் தீர்வு காண முயற்சி செய்யவில்லை என்பது புரியாத புதிராக இருக்கிறது.
மத்திய அரசு தான் காரணம் :
மத்திய அரசின் பின்னடைவான அணுகுமுறையின் விளைவுதான், குடியரசு தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் நடந்த போராட்டக் காட்சிகள். வன்முறை தவிர்க்கப்பட வேண்டும். வன்முறை சூழுமானால் அது ஒன்றே அரசின் திசைதிருப்பும் அரசியலுக்கு உதவியாக அமைந்துவிடும் என்பதை விவசாயிகளும் உணர வேண்டும். ஜனநாயக நெறிக்கு உட்பட்டு அமைதி வழியில் தீர்வு காண இருதரப்பினரும் முயல வேண்டும்.
அதிமுக ஆதரித்ததே காரணம் :
திரு. பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு மட்டும் நாடாளுமன்றத்தில் ஆதரிக்காமல் இருந்திருந்தால், 3 வேளாண் சட்டங்கள் நிறைவேறியே இருக்காது என்பதை நெருக்கடியான இந்த நேரத்தில் யாரும் நினைக்காமல் இருக்க முடியாது.
சட்டங்களை திரும்ப பெறுங்கள் :
இனியும் பிரதமர் தாமதிக்காமல் விவசாயிகளை நேரடியாக அழைத்து அவரே பேச வேண்டும். விவசாயிகளால் நிராகரிக்கப்படும் மூன்று வேளாண் சட்டங்களை முழுமையாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.