மார்ச் 7ம் தேதி திமுக பொதுக்குழு.. 'கன்ஸிடர்' பட்டியலில் இடம்பெறுமா தேமுதிக?
சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, வரும் மார்ச் 7ம் தேதி, திமுக பொதுக் குழுக் கூட்டம் நடைபெற உள்ளதாக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
'தேர்தல் தேதி சீக்கிரம் அறிவிங்கப்பா' என்று தமிழகத்தில் ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் ஆவலோடு காத்திருக்கின்றன. அதேசமயம், நீங்க எப்போ தேதி அறிவித்தாலும், 'வீ ஆர் ரெடி' என்ற மோடில் தேர்தல் பிரச்சாரங்களில் பெரிய கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. குறிப்பாக திமுகவில் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சுழன்று சுழன்று பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
அதேசமயம், திமுக அதிமுக ஆகிய இரு டாப் கட்சிகளும் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு, வெற்றி வாய்ப்பு தொகுதிகள் குறித்து பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக, திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு குறித்து இன்று கூட அறிவாலயத்தில் பேச்சு நடந்தது.
இந்நிலையில், மார்ச் 7ம் தேதி திமுக பொதுக்குழுவை கூட்டியுள்ளது. இதுகுறித்து கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஸ்டாலின் தலைமையில் 7-3-2021 ஞாயிறு அன்று, காலை 10 மணியளவில், திமுக பொதுக்குழுக் கூட்டம் சென்னை, கொட்டிவாக்கம், பழைய மாமல்லபுரம் (O.M.R) சாலை, ஒய்.எம்.சி.ஏ திடலில் உள்ள அரங்கத்தில் நடைபெறும்.
அதுபோது, பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து இந்த பொதுக்குழு கூட்டப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டணி பேச்சுவார்த்தைக்கு கூப்பிடுங்க, கூப்பிடுங்க என்று சைலண்ட் 'டூ' வைலண்ட் மோட் வரை அதிமுகவை கேட்டுப் பார்த்து ஓய்ந்து போயிருக்கும் தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் திமுகவின் பொதுக் குழு கூட்டத்தை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றன. ஏனெனில், அதிமுக சைடில் எந்த அழைப்பும் இல்லாததால் திமுக பக்கம் ஐக்கியமாக தேமுதிக விரும்புவதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
குறிப்பாக, திமுகவின் கூட்டணி கட்சிகளில் மாவட்ட அளவில் பலமான நிர்வாகிகள் பெரிதாக இல்லை என்ற காரணத்தால், தேமுதிகவின் எண்ணத்துக்கு திமுக கிரீன் சிக்னல் காட்டக் கூடும் என்று கூறப்படுகிறது. திமுக, அதிமுக போல கீழ் நிலையில் வலிமையான கட்டமைப்பு இருப்பதாலும், திமுகவின் 'கன்ஸிடர்' பட்டியலில் தேமுதிக இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், திமுக பொதுக்குழுவில் புதிதாக எந்தெந்த கட்சிகளை கூட்டணியில் சேர்ப்பது, எந்தெந்த கட்சிகளை கழட்டிவிடுவது என்று தீவிர ஆலோசனை நடத்தப்படும் என்று தெரிகிறது.