இடைத்தேர்தல் முடிவு.. கருணாநிதி நினைவிடத்திற்கு நேற்று இரவு சென்ற ஸ்டாலின்.. மலர் தூவி மரியாதை!
இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில் நேற்று திமுக தலைவர் ஸ்டாலின், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
சென்னை: இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில் நேற்று திமுக தலைவர் ஸ்டாலின், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
நேற்று 2 மாநில சட்டசபை தேர்தல் மற்றும் 51 தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் வெளியானது. மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியானது. மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக கட்சி ஆட்சி அமைக்கிறது.
அதேசமயம் ஹரியானாவில் இழுபறி நீடித்து வருகிறது. அங்கு தொங்கு சட்டசபை உருவாகி உள்ளதால் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது,
அதிமுக வெற்றி
தமிழகத்தில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தல் முடிவுகளும் நேற்றுதான் வெளியானது. இதில் இரண்டு தொகுதியிலும் அதிமுக கட்சியே வெற்றிபெற்றது. நாங்குநேரியில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் வெற்றிபெற்றார். விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் வெற்றிபெற்றார்.
அறிக்கை
இந்த நிலையில் மக்கள் கொடுத்த தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். இந்த தீர்ப்பை ஏற்றுக்கொண்டு, எதிர்காலம் மீது கவனம் செலுத்துவோம். வாக்களித்த அனைவருக்கும் நன்றி, என்று மு.க ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார்.
மரியாதை
இந்த நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் மற்றும் திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில், அவரது மகனும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். நேற்று இரவு திடீர் என்று மெரினா சென்ற அவர் மலர்தூவி மரியாதை செலுத்தினார். நீண்ட நேரம் ஸ்டாலின் அந்த நினைவிடத்திலேயே இருந்தார்.
தொண்டர்கள்
திமுக நிர்வாகிகள் பலர் இந்த நிகழ்வின் போது உடன் இருந்தனர். திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தயாநிதிமாறன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.