யாரை சமாதானம் செய்வது.. வைகோ - காங்கிரஸ் மோதலால் சிக்கலில் ஸ்டாலின்.. என்ன நடக்கிறது கூட்டணியில்?
மதிமுக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு இடையில் நிலவி வரும் பிரச்சனை காரணமாக தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் சிக்கலுக்கு உள்ளாகி உள்ளார்.
சென்னை: மதிமுக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு இடையில் நிலவி வரும் பிரச்சனை காரணமாக தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் சிக்கலுக்கு உள்ளாகி உள்ளார்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலிலும் சட்டசபை இடைத்தேர்தலில் திமுக மிகப்பெரிய கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இந்த கூட்டணி நன்றாக கிளிக் ஆகவே தேர்தலில் சிறப்பாக செயல்பட்டு 40 இடங்களில் 39 இடங்களை திமுக கூட்டணி வென்றது.
ஆனால் தற்போது அந்த திமுக கூட்டணிக்குள் புதிய குழப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் உள்ள மதிமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.
அமித்ஷாவுக்கு எதிராக அடங்கிப் போன தமிழக எதிர்க்கட்சிகள்... காணாமல் போன 'goback' கோஷம்
காரணம்
காஷ்மீர் 370 சட்டப்பிரிவு நீக்கம் குறித்த விவாதத்தில் மதிமுக எம்பி வைகோ பேசியதுதான் இந்த சண்டைக்கு காரணம். காஷ்மீர் பிரச்சனை குறித்து ராஜ்யசபாவில் பேசிய வைகோ, காஷ்மீரில் காங்கிரஸ் கட்சிதான் பச்சை துரோகம் செய்தது. இந்த பிரச்சனைக்கு முதல் காரணமே காங்கிரஸ்தான். காங்கிரஸ் காஷ்மீர் மக்களுக்கு துரோகம் செய்தது. அந்த மக்களை நம்ப வைத்து ஏமாற்றியது. அதை தற்போது பாஜக தொடர்ந்து கொண்டு இருக்கிறது, என்று பேசினார்.
என்ன பதிலடி
இதுதான் காங்கிரஸ் கட்சிக்கு வைகோ மீது கோபம் ஏற்பட காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு எதிராக காங்கிரஸ் தலைவர்கள் கடுமையாக பதிலடி கொடுத்து வருகிறார்கள். மதிமுக எம்பி வைகோ அரசியல் நாகரீகமற்றவர். கூட்டணியில் இருந்து கொண்டு காங்கிரஸ் கட்சியை அவர் விமர்சிக்கிறார். வைகோ யாருக்குமே விசுவாசமாக இருந்தது கிடையாது.
மோசம்
அவரின் அரசியல் பாதையை கவனிக்கும் எல்லோருக்கும் இது தெரியும். வைகோ தொடர்ந்து காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்தால் நாங்கள் சும்மா இருக்க மாட்டோம். என்று காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதேபோல் காங்கிரஸ் கூட்டணிக்கு துரோகம் செய்யும் மதிமுக எம்பி வைகோ ஒரு நம்பர் ஒன் துரோகி. காங்கிரஸ் தயவில்தான் வைகோ எம்பி ஆனார். வைகோ கொஞ்சம் நன்றியோடு இருக்க வேண்டும்.
மதிமுக பதிலடி
நாங்கள் ஆதரவு கொடுக்கவில்லை என்றால் அவரால் எம்பி ஆகி இருக்க முடியாது, என்று ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் விமர்சனம் செய்தார். இதற்கு மதிமுக தரப்பில் மல்லை சத்தியா முதலில் பதிலடி கொடுத்தார்.அதன்பின் நான் எம்பி ஆக திமுகதான் காரணம், காங்கிரஸ் காரணம் கிடையாது என்று வைகோவும் திருப்பி பதிலடி கொடுத்தார்.
என்ன சிக்கல்
இவர்கள் இருவருக்கும் இடையில் நடக்கும் இந்த சண்டையால் தற்போர் திமுக தலைவர் சிக்கலில் இருக்கிறார். அவரால் தற்போது மதிமுக எம்பி வைகோவை கோவித்துக் கொள்ள முடியாது. சட்டசபை பொதுத்தேர்தல் வரை அவர் மதிமுக போன்ற கூட்டணி கட்சிகளை பகைத்துக் கொள்வது சரியாக இருக்காது என்று கருதுகிறார். ஆனால் இன்னொரு பக்கம் அவருக்கு காங்கிரஸ் கட்சியும் முக்கியம்.
ஏன் முக்கியம்
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும், இந்நாள் தலைவர் சோனியா காந்தியும் ஸ்டாலினுக்கு நெருக்கமான நபர்கள். அவர்களை கைவிட வேண்டும் என்று ஸ்டாலின் விரும்ப மாட்டார். இதனால் இரண்டு பேரையும் சமாதானம் செய்து மீண்டும் கூட்டணிக்குள் அமைதியை கொண்டுவர ஸ்டாலின் முயன்று வருகிறார் என்று கூறுகிறார்கள்.